பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்கிறது?
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குப் பின்னர் சமையல் எரிவாயு விலையை 50 ரூபாய் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதோடு பெட்ரோல், டீசல், விலையை மீண்டும் உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வரும் 6ஆம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகு எந்த நேரத்திலும் இந்த விலை உயர்வு அறிவிப்பு வெளியாகலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, பெட்ரோல், டீசல் விலை 3 முதல் 5 ரூபாயும், மண்எண்ணெய் 2 ரூபாயும், சமையல் எரிவாயு 50 ரூபாய் வரையிலும் உயரக் கூடும் என்று தெரிகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சிரியா போர் பதற்றமும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக அமையும் என்று தெரிகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 35 காசு என்றும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசு என்றும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் விலை உயர்த்தப்படலாம் என்ற தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.