சிறைக்குப் போகும் வழியில் கைதிகளோடு மது விருந்து- 9 போலீசார் சஸ்பென்ட்!
புதுச்சேரி: காரைக்காலில் இருந்து புதுச்சேரி சிறைக்கு செல்லும் வழியில் கைதிகளுடன் மது விருந்து கொண்டாடிய 9 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் சிறையில் ஒரு பெண் உட்பட 3 கைதிகளால் வன்முறை ஏற்படக் கூடிய நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து 3 கைதிகளையும் புதுச்சேரிக்கு சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. 3 கைதிகளை அழைத்துக் கொண்டு 9 போலீசார் புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர்.
அப்போது கைதிகளின் உறவினர்களான எழிலரசி, மணி, வெற்றி ஆகியோர் மது பாட்டில்கள், வீட்டில் சமைத்த சாப்பாடு ஆகியவற்றுடன் போலீஸ் வேனில் ஏறிக் கொண்டனர். கைதிகள், கைதிகளின் உறவினர்களுடன் போலீஸ் வேனிலேயே உற்சாகமாக போலீசாரும் மது அருந்தி விருந்து சாப்பிட்டிருக்கின்றனர். இதனால் 132 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரியை சென்றடைய 3 மணிநேரத்துக்கும் மேலாகி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய புதுச்சேரி ஐஜி ரன்வீர் சிங் கிருஷ்ணா கைதிகளுடன் மது விருந்து கொண்டாடிய 9 போலீசாரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார். சஸ்பென்ட் செய்யப்பட்டோரில் ஒரு பெண் காஸ்டபிளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.