தலப்பாகட்டி பிரியாணி கடையின் பெயர் பிரச்சனை முடிந்தது

திண்டுக்கல்லைச் சேர்ந்த தலப்பாகட்டி நாயுடு ஆனந்தவிலாஸ் பிரியாணி ஹோட்டல் நிறுவனம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக மிகவும் பிரபலம். இந்நிலையில் சென்னை ராவுத்தர் பிரியாணி ஹோட்டல் நிறுவனத்திற்கு ராவுத்தர் தலப்பாகட்டு பிரியாணி கடை என்று பெயர் வைக்கப்பட்டது. தலப்பாகட்டி என்ற தங்கள் நிறுவனத்தின் பெயரில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றிவிட்டு அதை பயன்படுத்துவதை எதிர்த்து ஆனந்த விலாஸ் நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில் சென்னை ராவுத்தர் தலப்பாகட்டு பிரியாணி நிறுவனம் மீது திண்டுக்கல் தலாப்பாகட்டி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இரண்டு கடைகளுக்கும் இடையே சமரச ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி சென்னை ராவுத்தர் கடை இனி தலப்பாகட்டு என்ற பெயரை பயன்படுத்த மாட்டோம் என்றும், இன்னும் 60 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ள தங்களின் 29 கடைகளின் பெயரில் இருந்து தலப்பாகட்டை நீக்கிவிடுவதாகவும் தெரிவித்துள்ளது.
இனி வரும் காலத்தில் விளம்பரங்கள் மற்றும் பலகைகள் என்று எதிலும் தலப்பாகட்டு பெயரை பயன்படுத்த மாட்டோம் என்று ராவுத்தர் கடை உறுதி அளித்துள்ளது. மேலும் இது குறித்த வழக்குகளை கைவிடுவதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதையடுத்து இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுவில், எங்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.சுப்பையா ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications