தூத்துக்குடி டாக் ஆலை திறக்கப்பட்டது
தூத்துக்குடி டாக் ஆலை நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து டாக் ஆலை இன்று திறக்கப்பட்டது.
தூத்துக்குடியில் கடந்த 1978ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் பெர்ட்டிலைசர்ஸ்(டாக்) நிறுவனத்தை துவக்கி வைத்தார். இந்த நிறுவனம் ஸ்பிக் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது.
டாக் தொழிற்சாலை தொடர்பாக ஏற்பட்ட ஸ்பிக் நிறுவனத்தின் பல்வேறு குளறுபடிகளால் ஆலையை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து 1991ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்நிறுவனத்தின் பங்குகளை எல்லாம் ஸ்பிக் நிறுவனத்திற்கு விற்று விட்டார்.
அதனைத் தொடர்ந்து ஸ்பிக் உர தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனமாக தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் பெர்ட்டிலைசர்ஸ்(டாக்) நிறுவனம் செயல்பட்டு வந்தது. டாக் தொழிற்சாலை இயக்குவதற்கு ஸ்பிக் தொழிற்சாலையிலுள்ள யூரியா பிளாண்ட் இயக்குவது கட்டாயமாகும்.
இந்நிலையில் ஜூன் மாதம் 27ம் தேதி அதிகாலை 3மணியளவில் ஆலையை மூடுவதாக ஆலைநிர்வாகம் நோட்டிஸ் ஒட்டியதுடன் ஆலையை இழுத்து மூடியது. இதனையடுத்து தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தினர். இருந்தபோதும் ஆலையை திறக்க நிர்வாகம் முன்வரவில்லை.
இதனால் சம்பளம் ஏதும் கிடைக்காத சூழலில் தொழிலாளர்கள் நேற்று ஆலையை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதனையறிந்த கலெக்டர் ரவிக்குமார் ஆலை நிர்வாகத்துடன் நான் பேசி தீர்வு கிடைக்க வழிவகுக்கிறேன் என்றார். இதனையடுத்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதனையடுத்து, டாக் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும், ஆலை நிர்வாகத்திற்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பினர் இடையேயும் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து ஆலை இன்று திறக்கப்பட்டது. இதனால் டாக் தொழிலாளர்கள் அனைவரும் இன்று பணிக்கு சென்றனர். தொழிலாளர்களுக்கான பாக்கிசம்பளம் ஆலை தொடர்ந்து இயக்குவதை தொடர்ந்து வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.