காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏழை மக்களால் தாங்க முடியாத அளவுக்கு பொருளாதாரச் சுமையைச் சுமத்துகின்ற பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பிலும் டெசோ அமைப்பின் சார்பிலும் கச்சத்தீவை மீட்டுத் தருமாறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சத்தீவு இலங்கைக்குத் தான் சொந்தம், அதைத் திரும்பப் பெற இயலாது எனக் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதற்கேற்ப திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையர் நவநீதம்பிள்ளை, "இலங்கை மேலும் மேலும் ஒரு அதிகாரத்துவ அரசாகவே மாறி வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு ராஜபக்சே அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதில் கலந்துகொள்ளக் கூடாது என இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் எதிர்ப்பு எழுந்துள்ளது. உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களும் அதையே வலியுறுத்தி வருகிறார்கள்.
எனவே, இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தியும், தமது நிலையை மத்திய அரசு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 7-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சார்பாக சென்னையில் எனது (தொல்.திருமாவளவன்) தலைமையிலும், 12-ந் தேதி பிற மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.