சீமாந்திரா - தெலுங்கானா ஆதரவாளர்கள் மோதல்: ஹைதரபாத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஹைதராபாத்: ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் சீமா ந்திரா பகுதியினரின் போராட்டத்திற்கு அனுமதி அளித்ததை கண்டித்து, ஹைதராபாத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. சீமந்திரா-தெலுங்கானா போராட்டக்காரர்களிடையே மோதல் மூண்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தங்களது போராட்டத்தை ஹைதராபாத்துக்கு மாற்றி உள்ள சீமாந்திரா பகுதியினர், அங்கு உள்ள எல்.பி. ஸ்டேடியத்தில் ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி இன்று கூட்டம் நடத்தினர். இதில் பங்கேற்க சுமார் ஒரு லட்சம் பேர் ராயல சீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் இருந்து ஹைதராபாத் வந்துள்ளனர். இந்த கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று தெலுங்கானா பகுதியினர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அதை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
முழு அடைப்புப் போராட்டம்
சீமாந்திரா பகுதியினர் ஹைதராபாத்தில் போராட்ட கூட்டம் நடத்துவதை எதிர்த்து இன்று ஹைதராபாத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஹைதராபாத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தெலுங்கானா பகுதிகள் சிலவற்றிலும் பஸ்கள் ஓடவில்லை.
பேருந்துகள் தீவைப்பு
கூட்டத்திற்காக நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை கார்களிலும், பஸ் களிலும் ராயலசீமா, கடலோர ஆந்திராவில் இருந்து போராட்டக்காரர்கள் வந்த வண்ணம் இருந்தனர். ஹைதராபாத் அருகே அவர்கள் வந்த 2 பஸ்களை தெலுங்கானா போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
தெலுங்கானா - சீமாந்திரா மோதல்
இதையடுத்து சில இடங்களில் சீமாந்திரா-தெலுங்கானா போராட்டக்காரர்களிடையே மோதல் ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இரு தரப்பினரிடமும் ஏற்படும் மோதலை தடுக்க கடும் வாகன சோதனை நடந்து வருகிறது. ராயலசீமா, கடலோர ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவுக்கு வரும் எல்லா வாகனங்களும் சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டன.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக இன்று விஜயவாடா - ஹைதராபாத், அட்டங்கி - நர்கத்பல்லி, மற்றும் நாகர்ஜுனசாகர் சாலைகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
போர்க்களமான உஸ்மானியா
ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள், சீமாந்திரா பகுதியினரின் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் ஊர்வலங்களை நடத்த முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்த கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வீசி கட்டுப்படுத்தினர்.
ஹைதராபாத்தில் ஒரு பக்கம் போராட்டக்காரர்களும் மற்றொரு பக்கம் 'பந்த்' ஆதரவாளர்களும் திரண்டு உள்ளதால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
4 அடுக்கு பாதுகாப்பு
ஹைதரபாத்தில் சுமார் 5 ஆயிரம் போலீசாரை கொண்டு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க போலீசாருடன் 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் அலுவலகம், கவர்னர் மாளிகை, சட்டமன்ற வளாகம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகள், கட்சி அலுவலகம், கட்சி தலைவர்கள் வீடுகள் முன்பும் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
டிஆர்எஸ் எச்சரிக்கை
இதனிடையே சீமாந்திரா அரசு ஊழியர்கள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தெலுங்கானாவுக்கு எதிரான சீமாந்திரா அரசு ஊழியர்களின் போராட்டத்தை முறியடிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.