புதுவை சட்டம் ஒழுங்கு மோசம்! ஆளுநர் பகிரங்க பேட்டி! 'ரங்கசாமி' ஆட்சி 'கோவிந்தா'வா?
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநர் வீரேந்திர கட்டாரியா பகிரங்கமா பேட்டி கொடுத்திருப்பதால் முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ரங்கசாமியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
புதுவையில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் கடந்த மாதம் வியாபாரிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர் .ஆனால் மாநில அரசு ரவுடிகளை ஒடுக்கவில்லை.
சட்டம் ஒழுங்கு மோசம்- ஆளுநர் அதிரடி பேட்டி
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், புதுவையில் சட்டம்- ஒழுங்கு நிலைமை சரியில்லை. ரவுடிகளை கட்டுப்படுத்தும்படி முதல்வர் ரங்கசாமியிடம் கூறினேன். அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்னிடமும் இதுபற்றி ஆலோசனை நடத்தவில்லை.
உள்துறை அமைச்சரை சந்திப்பேன்
எனவே புதுவையில் சட்ட ஒழுங்கு பிரச்சிரனை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேச இருக்கிறேன். ரவுடிகளை ஒடுக்க நானே நேரடியாக நடவடிக்கையில் இறங்க போகிறேன் என்று அதிரடியாக பேட்டி கொடுத்திருந்தார்.
ஆட்சி டிஸ்மிஸ் அபாயம்
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஒரு மாநில ஆளுநரே மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினால் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் நிலைதான் உருவாகும்.
தற்போது புதுவை மாநில ஆளுநர் பகிரங்கமாக சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று முதல்வர் ரங்கசாமி மீது புகார் கூறியிருப்பதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரங்கசாமி முதல்வர் பதவியில் இருந்து விலகியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
காங்கிரஸ் கருத்து
காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான வைத்திலிங்கம் இதுபற்றி கூறும்போது, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநரே கூறி விட்டார். எனவே இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.
அதிமுக
புதுவை அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறுகையில், புதுவையில் உண்மை நிலவரங்களை ஆளுநர் கூறியிருக்கிறார். ஆளுநர் இது தொடர்பாக எழுத்து மூலமாக மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திமுக
மாநில தி.மு.க. அமைப்பாளர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் கூறும் போது, புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஆளுநர் தான் தலைமை நிர்வாகி ஆவார். அவரே சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று கூறியிருக்கிறார். இதை யாரும் அலட்சியப்படுத்த முடியாது. இங்குள்ள உண்மை நிலவரங்களை அவர் வெளியே சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலம் ஆளுநருக்கு முதல்வருகும் இடையே சரியான உறவு இல்லை என்பதை காட்டுகிறது என்றார்