3வது அணியின் பிரதமர் வேட்பாளராக தம்மை அறிவிக்கும்படி பிரகாஷ்காரத்திடம் சொன்னாரா ஜெ.?
சென்னை: இடதுசாரிகள் முன்னெடுக்கும் 3வது அணியின் பிரதமர் வேட்பாளராக தம்மை அறிவிக்கும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா, மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் பிரகாஷ்காரத்திடம் கூறியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிரகாஷ்காரத், கோட்டையில் காத்திருந்து சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது ராஜ்யசபா மற்றும் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது பிரகாஷ்காரத் தரப்பில், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளைவிட 3வது அணியே கூடுதல் இடங்களைக் கைப்பற்றக் கூடிய சூழல் இருக்கிறது என்று விவரித்திருக்கிறார். அப்போது திடீரென ஜெயலலிதா, அப்படியானால் 3வது அணியின் பிரதமர் வேட்பாளர் நான் தான் என்று அறிவித்துவிடுங்களேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
அதாவது 3வது அணியில் அதிமுக இணைய வேண்டுமெனில் தம்மை பிரதமர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று ஜெயலலிதா நிபந்தனை விதித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக இதர கட்சிகளுடன் விவாதித்து பதில் சொல்வதாக பிரகாஷ்காரத்தும் சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.