தா.கி. கொலை வழக்கு- தமிழக போலீஸின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் டிஸ்மிஸ்!
1996-2001 ஆண்டுவரை தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் தா. கிருட்டிணன். திமுக ஆட்சியைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும், 2003-ஆம் ஆண்டு மே 20-ந் தேதி மதுரையின் கே.கே. நகர் பகுதியில் கிருட்டிணன் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி, பி.எம். மன்னன், எஸ்ஸார் கோபி, ஐ. முபாரக் மந்திரி, வி. சிவகுமார் என்கிற கராத்தே சிவா உள்பட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
2006-இல் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து, வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அழகிரி உள்பட 13 பேர் மீதான இந்த வழக்கு விசாரணை ஆந்திர மாநிலம், சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு 13 பேரையும் 2008 மே 8-ஆம் தேதி சித்தூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக 2011-இல் ஆட்சிக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, கிருட்டிணன் கொலை வழக்கில் சித்தூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் தமிழக காவல் துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அழகிரி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். சித்தூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.
இம் மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், எஸ்.ஏ. போப்டே அடங்கிய பெஞ்ச், தா. கிருட்டிணன் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வழக்கு விசாரணை நடைபெற்ற ஆந்திர மாநிலத்தின் அரசுக்குத்தான் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தகுதி உள்ளது. அதனால், தமிழக காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டனர்.