தமிழக வடமாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: ஆந்திரா அருகே வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,
தமிழகத்தில் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நள்ளிரவில் கனமழையும் பெய்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த 1 வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
ஆந்திரா அருகே வங்க கடலில் வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சூழ்ற்சியே கனமழைக்கு காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் ஆந்திரா அருகே வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையும் சற்று நகர்ந்து வருவதால் இன்னும் 3 தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை பெய்யும். இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை அதிகாரி தெரிவித்தார். வட மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளிலும் கனமழை எதிர்பார்க்கலாம்.
சென்னை நகரில் இன்று அதிகாலை 8.30 மணி வரை மீனம்பாக்கத்தில் 1.6.மி.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 0.2 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மைலாப்பூர், மந்தைவெளி, தியாகராயநகர் பகுதிகளில் காலை 7 மணிமுதலே லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நகரின் முக்கிய பகுதிகளிலும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது