அமெரிக்காவில் நண்பருக்கு சர்பிரைஸ் கொடுக்கப் போய் பலியான இந்திய வம்சாவளி பெண்
டென்வர்: அமெரிக்காவில் நண்பருக்கு சர்பிரைஸ் கொடுக்க அலமாரியில் இருந்து குதித்த இந்திய வம்சாவளி பெண் நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தின் தலைநகரான டென்வரின் வடக்கு பகுதியில் உள்ளது லாங்மான்ட். அப்குதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் பிரமிளா லால்(18) தங்கள் குடும்ப நண்பரான நெரெக் காலியின்(21) வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளார். நெரெக்கை ஆச்சரியப்பட வைக்க அவரது அறையில் உள்ள அலமாரியில் மறைந்திருந்த பிரமிளா திடீர் என்று வெளியே வந்துள்ளார்.
அலமாரியில் இருந்து யாரோ வெளியே வருவதை பார்த்து அதிர்ந்த நெரெக் திருடன் என்று நினைத்து துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டார். இதில் படுகாயமடைந்த பிரமிளாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து பிரமிளாவின் தந்தை பிரவீன் லால் கூறுகையில்,
பிரமிளா நெரெக்கின் அலமாரியில் இருந்து குதித்து கத்தியிருக்கிறாள் என்று நினைக்கிறேன். இதனால் தனது வீட்டுக்குள் யாரோ புகுந்துவிட்டார்கள் என்று நினைத்து நெரெக் சுட்டுவிட்டார் என்றார்.
இந்த சம்பவம் நடந்தபோது பிரமிளாவின் 15 வயது தம்பியும் அந்த இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.