வதைத்த வெயில்.. சூரியனுக்கே சவால்! மேகத்தில் சம்பவம் - துபாயில் வெளுத்து கட்டிய செயற்கை மழை -எப்படி?
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்த நிலையில் செயற்கையான முறையில் அங்கு மழை கொட்டித்தீர்த்து இருக்கிறது. கிளவுட் சீடிங் எனப்படும் இந்த முறை எப்படி செயல்படுகிறது? இதன் பின்னால் இருக்கும் விஞ்ஞான காரணங்கள் என்ன என்பதை இதில் காண்போம்.
பொதுவாகவே அரபு நாடுகள் என்றால் வறண்டு நீண்ட பாலைவனங்களும், தலையை பிளக்கும் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்பதையும் நாம் அறிந்திருப்போம். தமிழ்நாட்டில் கோடைகாலங்களில் அடிக்கும் வெயிலையே நம்மால் தாங்க முடியாத சூழலில் அங்கு பணிபுரியும் லட்சக்கணக்கான தமிழர்கள் 45 டிகிரிக்கும் அதிகமான வெயிலை தினசரி சமாளித்து வருகிறார்கள்.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களால் வெயிலின் கோரம் கடுமையாக இருந்து வருகிறது. அங்குள்ள அபுதாபி துபாய், ஷார்ஜா, அல் அய்ன், பனியாஸ், ராஸ் அல் கய்மா, ஃபுஜெய்ரா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த சூழலில்தான் ஜூலை தொடக்கத்திலிருந்தே இப்பகுதிகளில் நல்ல மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி! அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யானுடன் தீவிர ஆலோசனை
செயற்கை மழை
ஒவ்வொரு முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நல்ல மழை பெய்யும்போதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் இது, கிளவுட் சீடிங் முறையால் வரும் செயற்கை மழை என்று கணிக்கின்றனர். இந்த முறையும் துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரத்தின் பல பகுதியில் கொட்டிய மழையின் பின்னணியில் இருப்பது இந்த கிளவுட் சீடிங் முறைதான்.
கிளவுட் சீடிங் என்றால் என்ன?
கிளவுட் சீடிங் என்றால் என்ன என்பதை அதன் பெயரை வைத்தே நம்மால் புரிந்துகொள்ள முடியும். கிளவுட் என்றால் தமிழில் மேகம் என்றும், சீடிங் என்றால் தமிழில் விதைப்பது என்றும் பொருள். அதாவது விளை நிலங்களில் விதைகளை தூவுதைபோன்று மேகங்களில் வேதிப்பொருட்களை தூவுவதே இந்த திட்டத்தின் அடிப்படை. எளிதில் இதை புரிந்துகொள்ள முடிந்தாலும் இதன் செயல்பாடுகள் மிகவும் சிக்கலானது.
விமானங்களில் வேதிப்பொருள்
மழை பொழிவை தூண்டும் வேதிப்பொருட்களை விமானங்களில் சுமந்துசென்று மேகங்களில் தூவப்படுகின்றன. தற்போது இதற்காக டிரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் ட்ரோன்கள் மூலமாக துபாயில் வேதிப்பொருட்கள் தூவப்பட்டன. அமீரகத்தில் இந்த செயற்கை மழை திட்டத்தை பரிசோதித்து வரும் சீனாவை சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுவின் உவா சின் சுவாங் சி-யின் தலைமை விஞ்ஞானி லுலின் க்சூவும் இதை ஒரு சிக்கலான செயல்பாடு என்றே கூறி இருக்கிறார்.
மேகங்கள்
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "வெப்ப சலன மேகங்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. மேகத்தின் சில விசயங்களில் நாம் மாற்றங்களை செய்தால் அது சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அதை புரிந்துகொள்வதும் கண்காணிப்பதும் அதன் பாதிப்புகளை மதிப்பிடுவதும் கடினம். 2 மேகங்கள் ஒரே மாதிரியானவை அல்ல. மலைகளில் உருவாகும் மேகங்களுக்கும், தாழ்வான பகுதிகளில் உள்ள மேகங்களுக்கும் வித்தியாசம் உள்ளது." என்றார்.
ஆபத்தும் இருக்கு
மழைக்காக மேகங்களில் தூவப்படும் வேதிப்பொருள் உப்பு கிரிஸ்டல்களாகவே இருக்கும். அவற்றின் அளவு மேறுபடும். அதிகமான வேதிப்பொருளை தூவுவதன் மூலம் அதிக மழைப்பொழிவை பெற முடியும் என்று சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் இந்த திட்டத்தால் மழை பொழிவும் குறையும் அபாயமும் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அதே நேரம் கணினி தொழில்நுட்பங்களின் மூலமாக விஞ்ஞானிகள் இதனை புரிந்துகொள்கின்றனர்.
அமீரகத்தின் சூழல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மேகங்களும் சிக்கலானவை என விஞ்ஞானி லுலின் கூறுகிறார். "கடந்த ஜனவரி மாதம் அமீரகத்தில் கொட்டித்தீர்த்த மழை செயற்கையானது அல்ல. செயற்கை மழையால் மட்டும் அதிக மழைப்பொழி ஏற்படும் என்று நான் நம்பவில்லை. இயற்கை காரணிகளும் ஒத்துழைக்க வேண்டும். அமீரகத்தை போல் அனைத்து நாடுகளிலும் பிரச்சனை கிடையாது." என்கிறார் சீன விஞ்ஞானி லுலின்.