2026ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி! யு டர்ன் அடித்த அன்புமணி! யூகங்களுக்கு முற்றுப்புள்ளி!
2026 சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி பேசிய அன்புமணி
அரியலூர்: 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியை நோக்கி பாமக நெருங்கி வருவதாக தகவல்கள் உலா வந்த நிலையில் அப்படியே யு டர்ன் அடித்த அன்புமணி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதனைக் கூறியிருக்கிறார்.
அரியலூரில் பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அன்புமணி அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

வாக்கு சதவீதம்
''தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு கட்சியும் அந்தந்த பகுதிகளில் பலமான கட்சியாக இருக்கின்றது. அதுபோல பாமக வட தமிழ்நாட்டில் பலமாகவே இருக்கிறோம். பொதுவாக தமிழ்நாடு முழுவதும் பார்த்தால் ஆறு முதல் எட்டு சதவீதம் வாக்கு வங்கி பாமகவிற்கு இருக்கிறது என்றால், 100 தொகுதிகளில் 20% வாக்கு வங்கியும், 60 தொகுதிகளில் 30 சதவீத வாக்கு வங்கியும், 40 தொகுதிகளில் 35 சதவீதம் வாக்கு வங்கிகளும் எங்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. நாங்கள் தனியாகவே வெற்றிப்பெறக் கூடிய அளவிற்கு சில தொகுதிகளில் பலமாகவே இருக்கின்றோம்.''

பாமக தலைமையில் ஆட்சி
''55 ஆண்டு காலம் அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்து விட்ட நிலையில், 2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதற்கான வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றோம். பாட்டாளி மக்கள் கட்சி வாக்கு வங்கி மேலும் மேலும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ''

அதிமுக உட்கட்சி பிரச்சனை
''அதிமுக உட்கட்சி பிரச்சனை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. அவர்கள் பிரச்சினையை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் பாஜக தலையீடு குறித்து, எவ்வித கருத்து சொல்வதற்கும் எனக்கு விருப்பம் இல்லை. ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்து இட மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. பலமுறை காரணமும் கேட்டுபார்த்தும் இதுவரை அவர் வாய் திறக்கவில்லை. அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்தவர், சட்ட மசோதாவிற்கு ஏன் அனுமதி அளிக்க மறுக்கிறார்? சட்ட மசோதா வந்த பிறகு இதுவரை 12 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த 12 பேரின் ரத்தக்கறை ஆளுநரின் கையில் தான் இருக்கிறது.''

நல்ல போக்கு அல்ல
''ஆன்லைன் சூதாட்டத்தினால் பாதிக்கப்படும் குடும்பங்களை பற்றியோ, தமிழ்நாடு பற்றியோ, இளைஞர்களை பற்றியோ சிறிதும் அக்கறை இல்லாமல் கவலை கொள்ளாமல் ஆளுநர் இருக்கிறார். இது நல்ல போக்கு அல்ல. அதேபோன்று குட்கா தடை சட்டம் தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications