30 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்களை இடிச்சிருக்காங்க.. அத்தனையையும் மீட்கப்போறோம்: ஸ்ரீராமசேனா
பெங்களூர்: ஞானவாபி வழக்குக்கு மத்தியில் இந்தியாவில் 30000 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், சட்டபோராட்டம் மூலம் கோவில்கள் மீட்கப்படும் எனவும் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஸ்ரீராம சேனா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக பிரமோத் முத்தலிக் உள்ளார். இந்நிலையில் பிரமோத் முத்தாலிக் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் 30,000 இந்து கோவில்களை இடித்து மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் மீட்போம். தைரியம் இருந்தால் தடுத்து பாருங்கள். பாபர்மசூதி பிரச்சனையின்போது ரத்த ஆறு ஓடும் என கூறினார்கள். ஆனால் இந்துக்களை தொட முடியவில்லை. மனசாட்சி இருந்தால் இதற்கு முன்பு இடிக்கப்பட்ட கோவில்களின் இடத்தை எங்களிடம் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள். இனியும் நாங்கள் சகித்து கொள்ளமாட்டோம். சட்டப்போரட்டம் மூலம் மீட்போம். எங்களை தடுக்க முடியாது.
முன்னதாக பாஜகவின் முன்னாள் துணை முதல் அமைச்சர் கே எஸ் ஈஸ்வரப்பாவும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார். அவர் கூறுகையில், ‛‛ இந்தியாவில் மொத்தம் 36 ஆயிரம் கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. எங்கு வேண்டுமானாலும் மசூதி கட்டி தொழுகை நடத்தலாம். ஆனால் இந்து கோவில்கள் நிலத்தில் கட்டிய மசூதிகள் மீட்கப்படும்'' என தெரிவித்து இருந்தார்.
சமீப காலமாக இந்தியாவில் மசூதிகள், புராதான சின்னங்கள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அருகே மங்களூர் மசூதி கீழே இந்து கோவில் போன்ற அமைப்பு தென்பட்டது. ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக தகவல் வெளியானது. குதுப்மினார் கூட இந்து கோவில் மீதுதான் கட்டப்பட்டதாக சர்ச்சை வந்தது. இவற்றின் தொடர்ச்சியாக தான் இந்து கோவில்களை மீட்போம் என சவால் விடுத்துள்ளனர்.