9 மாத குழந்தை உட்பட.. செய்தி இதழ் எடிட்டர் குடும்பத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுப்பு! பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூர் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக ஒரே வீட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதேநேரம், 2 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளது.
பெங்களூர் நகரின் மாகடி ரோடு திகளரபாளையா என்ற பகுதியை சேர்ந்தவர் கலஹேரி ஷங்கர்.
இவர் சேத்தன் சர்க்கிள் பகுதிகள் கன்னட செய்தி இதழ் ஒன்றை நடத்தி மற்றும் அதன் எடிட்டராக இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர்.

மகள் புகுந்த வீடு
இவரது மகள் திருமணம் செய்து போன இடத்தில் மாமனார் வீட்டில் தகராறு செய்து கொண்டு பிறந்த வீட்டுக்கு திரும்பியுள்ளார். ஆனால் மறுபடியும் புகுந்த வீட்டுக்கு செல்லுமாறு சங்கரர் தனது மகளை வற்புறுத்தியுள்ளார். ஷங்கரின் மனைவி பாரதி தனது மகளோடு சேர்ந்து கொண்டு அவர் பிறந்த வீட்டில்தான் இருப்பார் என்று கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

தெலைபேசியில் தொடர்பு கொண்டார்
இதனால் அதிருப்தி அடைந்த ஷங்கர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பாக வீட்டை விட்டு கிளம்பி சென்றுவிட்டார். ஆனால் வீட்டில் உள்ளவர்களை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது யாருமே போனை எடுத்து பேச வில்லை என்று கூறப்படுகிறது .

வீடு திரும்பிய எடிட்டர்
இதனால் சந்தேகமடைந்த ஷங்கர் நேற்று மாலை தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார் . அப்போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. தன்னிடமிருந்த சாவி யை பயன்படுத்தி, ஷங்கர் வீட்டுக்குள் சென்று பார்த்தால், அங்கு அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

5 பேர் பலி
ஷங்கரின் மனைவி பாரதி (51), மகள்கள் சஞ்சனா (34), சிந்து ராணி (31), மகன் மதுசாகர் (25), ராணியின் 9 மாத கைக்குழந்தை ஆகியவர்கள் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். குழந்தையை தவிர மற்ற அனைவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தனர். சஞ்சனாவின் 2 வயது குழந்தை மட்டும் வீட்டுக்குள் உயிருடன் இருந்தது.

பட்டினியால் 9 மாத குழந்தை உயிரிழந்த சோகம்
அதிர்ச்சி அடைந்த ஷங்கர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் உயிரோடு இருந்த குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 9 மாத குழந்தை ஐந்து நாட்களாக சாப்பிட உணவு கிடைக்காததால் பட்டினியால் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தப்பியது 2 வயது குழந்தை
2 வயது குழந்தை மட்டும் எப்படியோ பசியை தாங்கி உயிரோடு தப்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications