முஸ்லிம் மன்னருக்கு பதில் இந்து மன்னர்.. ‛‛திப்பு’’ எக்ஸ்பிரஸ் ரயில் பெயர் ‛‛உடையார்’’ என மாற்றம்!
பெங்களூர்: மைசூர்-பெங்களூர் இடையே இயக்கப்படும் ‛‛திப்பு'' எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை ‛‛உடையார்'' எக்ஸ்பிரஸ் என ரயில்வே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மைசூர் புலி என்ற புனைப்பெயருடன் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மன்னர் தான் திப்பு சுல்தான். கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளி 1750ல் பிறந்த இவர் தந்தை ஹைதர் அலியின் மரணத்துக்கு பிறகு 1782ல் தனது 32வது வயதில் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார்.
1789ல் திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் நடந்தது. 1792 வரை நடந்த போரின் இறுதியில் திப்பு சுல்தான் பெரும் பகுதியை இழந்தார். 1799ல் நடந்த போரில் வீழ்த்தப்பட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து திப்பு சுல்தான் இறந்தார்.
குழந்தையை வைத்து சிவகங்கை ரவுடி செய்த வேலையை பாருங்க.. இப்போ கம்பி எண்ணுறாரு!
திப்பு சுல்தான் செய்தது என்ன?
இவர் தேவதாசி முறையை எதிர்த்ததாகவும், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு தடை விதித்ததோடு, விவசாயிகளின் புதுமை திட்டங்களை செயல்படுத்தி பொது வினியோக திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் போர் படை பயிற்சியில் சிறந்து விளங்கிய அவர் ராணுவ தொழில்நுட்பத்திலும் திறம்பட செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலேயருக்கு பணியாமல் அவர்களை எதிர்த்து போரிட்ட திப்பு சுல்தானை ‛மைசூர் புலி' என்ற அடைமொழியை பெற்று கொண்டார்.
திப்பு சுல்தான் தொடர்பாக சர்ச்சை
இவர் தொடர்பான குறிப்புகள் கர்நாடகா பாடத்திட்டங்களில் உள்ளது. இந்நிலையில் தான் திப்பு சுல்தான் தொடர்பான குறிப்புகளை முழுமையாக நீக்க வேண்டும் என்று சமீபத்தில் பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். இது சர்ச்சையானது. இதற்கு மத்தியில் பெங்களூர் - மைசூர் இடையே திப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. 1980ல் இருந்து மைசூர்-பெங்களூர் இடையே இந்த ரயில் சேவை இயங்கி வருகிறது. இந்த ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்ற வேண்டுமென்று மைசூர் எம்பி பிரதாப் சிம்ஹா உள்பட பாஜகவினர் கோரிக்கை வைத்தனர்.
ரயில் பெயர் மாற்றம்
இதுதொடர்பாக பிரதாப் சிம்ஹா எம்பி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதினார். இதை மத்திய ரயில்வே அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. அதன்படி பெங்களூர்-மைசூர் இடையே இயங்கிய திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் உடையார் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
யார் இந்த உடையார்?
கர்நாடகாவில் ரயில் சேவையை விரிவுப்படுத்த மைசூரு உடையார் மன்னர்களின் பங்கு முக்கியமானதாகும். உடையார் வம்சம் என்பது தற்போதைய மைசூர் அரண்மனையின் சாம்ராஜ்ஜியமாகும். உடையார் அரச வம்சத்தினர் மைசூரை 1399 முதல் 1761 வரையும் அதன்பிறகு 1799 முதல் 1947 வரையும் மைசூரை ஆட்சி செய்தனர். இதனை ஏற்று தான் உடையார் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்ற மத்திய அரசு ஓகே சொல்லியுள்ளது.
கிளம்பிய எதிர்ப்பு
இதற்கிடையே திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் ரயில் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முஸ்லிம் மன்னரான திப்பு சுல்தானை வரலாற்றில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். உடையார்களின் சேவையை போற்ற புதிய ரயிலுக்கு உடையார் எக்ஸ்பிரஸ் பெயர் வைத்திருக்கலாம். அதை விடுத்து திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பெயர் மாற்றம் என்பது ஏற்க முடியாதது என எதிர்க்கட்சியினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.