மூச்சுமுட்டும் பெங்களூர்! காற்றின் தரம் மிக மோசம்.. தென் இந்திய நகரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்
பெங்களூர்: கொரோனா பரவல் காரணமாக அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வரும் போதிலும் கூட, பெங்களூரில் காற்று மாசு மிக மோசமான அளவை தொட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது காற்று மாசு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக டெல்லி, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் காற்று மாசு முக்கிய பிரச்சினையாக உள்ளது.
கடந்த 2019இல் முதலில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது. நாட்டில் பல பகுதிகளில் காற்று மாசின் நிலை சற்றே மேம்பட்டது. ஆனால், இப்போது அவை மீண்டும் பழைய நிலைக்கே சென்றுள்ளன.
காற்று மாசு
இந்நிலையில், பெங்களூரில் நிலவும் மோசமான காற்று மாசு குறித்து க்ரீன்பீஸ் என்ற நிறுவனம் தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. காற்று மாசு என்பது வட இந்தியாவுக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் மாசடைந்த காற்றையே சுவாசிப்பதை இந்த ரிப்போர்ட் காட்டுகிறது. நாட்டின் 80% நகரங்களில் PM10 துகள்கள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
காற்று துகள்கள்
பெங்களூரில் உள்ள அனைத்து இடங்களிலும் PM 2.5 மற்றும் PM 10 துகள்களின் அளவு உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளை விட அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் எட்டு நிலையங்கள் PM 10 துகள்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரத்தை விட அதிகமாக உள்ளன. இத்தனை காலம் வட இந்திய நகரங்கள் மட்டுமே காற்று மாசால் மோசமாகப் பாதிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு வந்த நிலையில், இந்த அறிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பயன் இல்லை
கடந்த சில மாதங்களாகவே கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். அதேபோல கொரோனா காரணமாக அவ்வப்போது கட்டப்பாடுகள் விதிக்கப்படும் போதிலும் அவை நகரங்களில் நிலவும் காற்று மாசை குறைப்பதில் உதவவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பெங்களூர்
தென் இந்தியாவில் உள்ள 10 முக்கிய நகரங்களில் PM2.5 மற்றும் PM10 துகள்களின் எண்ணிக்கை உலக சுகாதார அமைப்பின் தரநிலையைக் காட்டிலும் மோசாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பெங்களூரை எடுத்துக் கொண்டால், நகரின் மொத்த மக்கள் தொகை 1.2 கோடியாக உள்ளது. நகரில் மொத்தம் ஒரு கோடி வாகனங்கள் உள்ளது.
காரணம்
அதிகரிக்கும் தனிநபர் வாகனங்கள், மோசமான சாலைகள், முறையான திட்டமிடல் இல்லாதது காற்று மாசு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் மிக மோசமான போக்குவரத்து நெரிசலைக் கொண்ட நகரமாகப் பெங்களூரு உள்ளது. இதனால் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையும் காற்று மாசை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துடன் தொழிற்சாலை மாசு, கட்டுமானங்களில் இருந்து கிளம்பும் தூசும் சேர்ந்து கொள்வதால் காற்று மாசு மிக மோசமானதாக உருவெடுத்துள்ளது.