கர்நாடக கேபினட் இன்று பதவியேற்பு.. துணை முதல்வர் பதவி இல்லை.. எடியூரப்பாவை விஞ்சி விட்டாரா பொம்மை?
பெங்களூர்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் அமைச்சரவையில் 29 புதிய அமைச்சர்கள் புதன்கிழமையான இன்று பதவியேற்கிறார்கள். இருப்பினும், துணை முதல்வர் பதவி யாருக்கும் தரப்படவில்லை.
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா கடந்த ஜூலை 26ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜூலை 28ம் தேதி பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.
எடியூரப்பா அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர் பசவராஜ் பொம்மை. மேலும் எடியூரப்பாவை போலவே லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பெயர் புதிய முதல்வராக தேர்வானது.

3 துணை முதல்வர்கள்
பசவராஜ் பொம்மை மட்டும் முதல்வராக பதவியேற்ற நிலையில், அமைச்சரவையில் யாரையெல்லாம் சேர்ப்பது என்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 3 துணை முதல்வர் பதவி உருவாக்கப்படும் என்றும் அப்போதுதான் அதிருப்தியாளர்களை சமாளிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.

எடியூரப்பா அமைச்சரவை
ஆனால், இன்றைய தினம் 29 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். ஆனால் துணை முதல்வர் பதவி யாருக்கும் தரப்படவில்லை. எடியூரப்பா முதல்வராக இருந்தபோது கூட அதிருப்தியாளர்களை சரிகட்ட 3 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். கர்நாடக வரலாற்றிலேயே அதுதான் அதிகபட்ச துணை முதல்வர்கள் எண்ணிக்கையாக பார்க்கப்பட்டது.

சக்தி வாய்ந்த தலைவர்
இந்த நிலையில்தான், பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் துணை முதல்வர் இல்லை. இதன் மூலம் சக்தி வாய்ந்த தலைவராக பசவராஜ் பொம்மையை வார்த்தெடுக்கதான் பாஜக விரும்புவது நன்கு தெரிகிறது. அடுத்த 2 வருடங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதுதான் உதவும் என பாஜக நினைக்கிறது.

ஜாதி முக்கியத்துவம்
பொம்மையின் 8 அமைச்சர்கள் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தலா ஏழு பேர் வொக்கலிகா மற்றும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர், பெண் ஒருவர், மூன்று பட்டியல் சாதியினர், ஒருவர் பட்டியல் பழங்குடியினர் மற்றும் இருவர் வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

டெல்லி விஜயம்
அமைச்சரவை விரிவாக்கத்தை இறுதி செய்வதற்காக பசவராஜ் பொம்மை கடந்த இரண்டு நாட்களாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் மூத்த மத்திய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பசவராஜ் பொம்மைக்கு சவால்
புதிய முதலமைச்சருக்கு அமைச்சரவை விரிவாக்குவதுதான் முதல் பெரிய சவாலாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அவர் ஆளும் பா.ஜ.க.வில் உள்ள கோஷ்டி பிரிவுகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டிய இக்கட்டில் இருந்தார். "சீனியர்கள்" மற்றும் "இளைஞர்கள்" என பகுத்து அமைச்சர்களை நியமிக்க வேண்டியிருந்தது. 2019ல் காங்கிரஸ்-ஜேடி (எஸ்) கூட்டணி ஆட்சி கலைய காரணமாக இருந்து பிறகு பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்களையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இதையெல்லாம் எப்படி பசவராஜ் பொம்மை சரி செய்தார் அல்லது கோஷ்டி பூசல் வெடிக்குமா என்பதை வரும் நாட்கள் உறுதி செய்யும். அதே நேரம் முதல் ஆசிட் டெஸ்டில் பசவராஜ் பொம்மை பாஸ் செய்து விட்டார் என்பது மட்டும் உண்மை.












Click it and Unblock the Notifications