ஞாபகம் இருக்கா.. பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயில்.. கரெக்ட்! நாட்டிலேயே சிறந்த சிறையாக தேர்வு
பெங்களூர்: இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளுக்கு சென்று சிறைகளின் நிலை, சுகாதாரம், பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து சிறந்த சிறைகளுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 6ஆவது அனைத்து இந்திய சிறைகளுக்கான சுகாதார போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 1,319 சிறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வெளியாகும் சசிகலா.. நேராக ஓசூர் ஹோட்டலில் தங்குகிறாரா?.. அப்போ சென்னை?
சிறந்த சிறை
இந்த போட்டியில் இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தேர்வு செய்யப்பட்டது. இந்த சிறைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. ஆந்திராவில் உள்ள மத்திய சிறைக்கு 2 ஆவது பரிசும், தமிழ்நாடு மத்திய சிறைக்கு 3ஆவது பரிசும் கிடைத்துள்ளது.
பரப்பன அக்ரஹார
இந்த பரப்பன அக்ரஹார சிறையை பெங்களூர் மத்திய சிறை என்றும் அழைப்பர். கர்நாடகாவில் உள்ள இந்த சிறை மிகவும் பெரியது. இங்கு ஒரே நேரத்தில் 4000 கைதிகளை அடைக்கலாம். இது பெங்களூர்- ஓசூர் சாலையில் பரப்பன அக்ரஹாரம் என்ற இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை கொண்டும் அழைக்கப்படுகிறது.
விசாரணை கைதி
1997ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சிறை, 2000 ஆம் ஆண்டு மத்திய சிறைச் சாலையாக மாற்றப்பட்டது. கர்நாடகா மாநில நீதிமன்றங்களின் விசாரணை கைதிகளும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களும் இந்த சிறைச் சாலைகளில் அடைக்கப்படுகிறார்கள். இந்த சிறையில் முக்கிய தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா சிறையில் இருந்தார்.
சுரங்க மோசடி
சுரங்க மோசடி விவகாரத்தில் தொழிலதிபர் ஜெனார்த்தன ரெட்டி, கர்நாடகா முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்ய செட்டி உள்ளிட்டோரும் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். அது போல தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது அண்ணி இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தனர்.