காங்கிரஸ் போட்ட ‘மெகா’ பிளான்.. அடுத்த நாளே அதிரடி.. பாஜகவின் கவுன்ட்டர் ஆக்ஷன்- போச்சே! என்னாகுமோ?
பெங்களூர் : காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கேவை தேர்வு செய்து 'தலித்' சமூகத்தவர் மத்தியில் பலம் பெற காங்கிரஸ் வியூகமிட்ட நிலையில், கர்நாடக பாஜக அரசு, தலித்களை குறிவைத்து ஒரு முக்கியமான நகர்வைச் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை எதிர்க்கவேண்டிய சவால் மிக்க முக்கியமான தருணத்தில், அரசியல் ரீதியாக பலம் பெறும் வகையில், தலித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
கர்நாடகாவில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அந்த மாநிலத்தை சேர்ந்த தலித் சமூகத்தவரான மல்லிகார்ஜூன கார்கேவை தலைவர் ஆக்கியது காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில், கர்நாடக பாஜக அரசு, பட்டியலித்தவருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து அவசர சட்டத்தை கொண்டு வர உள்ளது. காங்கிரஸின் தலித் அரசியல் எழுச்சிக்கு எதிர்வினையாகவே இந்த திட்டத்தை பாஜக கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் குடும்ப கட்சியா? காந்தி குடும்பம் அல்லாத தலைவர்கள் இவ்ளோ பேரு இருக்காங்களே - இதோ லிஸ்ட்
காங்கிரஸ் தலைவரான கார்கே
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், சசி தரூரும் போட்டியிட்டனர். மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். 1956-ல் அம்பேத்கர் பவுத்த மதத்தைத் தழுவியபோது கார்கே குடும்பத்தினரும் பவுத்தம் தழுவினர். 1969ஆம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்த மல்லிகார்ஜூன கார்கே, 1972-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு வென்றார்.
செல்வாக்கு மிக்க தலைவர்
1972-ம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை நடந்த 9 சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார் மல்லிகார்ஜூன கார்கே. 1976ஆம் ஆண்டு முதல் கர்நாடக அமைச்சரவையில் முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்திருக்கிறார். 40 ஆண்டுகாலம் எம்.எல்.ஏவாக இருந்த கார்கேவுக்கு 1999 முதல் நான்கு முறை கர்நாடகாவின் முதலமைச்சராகவும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவர் தலித் என்பதால் அந்த வாய்ப்புகள் நழுவின. தலித் என்பதற்காகவே எனக்கு முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்க மாட்டேன் என பகிரங்கமாகவே அறிவித்தார் மல்லிகார்ஜூன கார்கே.
கார்கே ஆளுமை
பின்னர் தேசிய அரசியலுக்கு நகர்ந்த அவர், 2009, 2014ஆம் ஆண்டு தேர்தல்களில் வென்று எம்.பி ஆனார். மத்திய அமைச்சராகவும் செயல்பட்டார். 2019 எம்.பி தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே முதல்முறையாக தோல்வியைத் தழுவிய நிலையில், ராஜ்யசபா எம்.பி ஆக்கப்பட்டார். மல்லிகார்ஜூன கார்கே மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புகளையும் வகித்தார். நாடாளுமன்றத்தில் பாஜகவின் மதவாத கொள்கைகளுக்கு எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பியிருக்கிறார் கார்கே.
காங்கிரஸ்
கர்நாடகாவில் இன்னும் 6 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவை தலைவர் ஆக்கினால் கர்நாடகா தேர்தலில், தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என காங்கிரஸ் தலைமை கணக்கு போட்டுள்ளது. கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி நல்ல அடித்தளத்தோடு இருக்கிறது. இதனால், அங்கு தீவிரம் காட்டினால் நிச்சயம் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது காங்கிரஸின் கணக்காக இருக்கிறது.
தலித் - அரசியல்
அதேபோல தலித் ஒருவருக்கு தலைவர் பதவி கொடுத்தால் தேசிய அளவிலும் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல விளைவுகள் ஏற்படும் என வியூகம் அமைத்துள்ளது காங். தலைமை. மல்லிகார்ஜூன கார்கே தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்பதால் தென் மாநிலங்களில் காங்கிரஸின் செல்வாக்கும் அதிகரிக்கும். இதையெல்லாம் வைத்தே மல்லிகார்ஜூன கார்கேவை முன்னிறுத்தி, காங்கிரஸ் தலைவராக்கியுள்ளது தலைமை. நாடு முழுவதும் தலித்களை ஈர்க்கும் வகையிலான காங்கிரஸின் இந்த நகர்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வோட் கேப்சர்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலித் 'வோட் கேப்சர்' முயற்சிக்கு எதிராக ஒரு முக்கியமான நகர்வைச் செய்துள்ளது பாஜக. கர்நாடக மாநிலத்தில் ஆளும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து அவசர சட்டம் கொண்டு வர இருக்கிறது. இந்த அவசர சட்டத்திற்கு இன்று அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தலித் இட ஒதுக்கீடு
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கான இடஒதுக்கீட்டை 15%லிருந்து 17% ஆகவும், 3% முதல் 7% ஆகவும் உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்துக்கு இன்று எனது அமைச்சரவை ஒப்புதல் அளித்து வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு அவர்களின் வாழ்வில் ஒளியையும் பிரகாசத்தையும் கொண்டு வந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களை உயர்த்தும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
எதிர் நகர்வு
தலித் சமூகத்தைச் சேர்ந்த கார்கேவை தலைவராக்கி கர்நாடகாவில் தலித் வாக்கு வங்கியை கவர காங்கிரஸ் திட்டமிட்ட நிலையில், அடுத்த நாளே, தலித்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான அவசர சட்டத்திற்கு பாஜக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன் மூலம், காங்கிரஸின் முயற்சிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது, காங்கிரஸின் திட்டத்திற்கு பாஜக உடனடி முட்டுக்கட்டை போட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
என்னாகும்
இன்னும் 6 மாதங்களில் நடைபெறவிருக்கும் கர்நாடகா சட்டசபை தேர்தலில், தலித் சமூகத்தவரை முன்வைத்து காங்கிரஸ் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா? அல்லது தலித்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து பாஜக கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு பலன் கிடைக்குமா என்பது போகப்போகத் தெரியும். கர்நாடகாவில், பாஜகவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து, காங்கிரஸுக்கு பேரிடியைக் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் கர்நாடகா வட்டாரத்தினர்.