மது + கறிவிருந்து.. தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தால்.. சர்ச்சையில் சிக்கிய கர்நாடக பாஜக எம்பி
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் பாஜக எம்பி சுதாகர் வெற்றி பெற்றதற்காக அவரது ஆதரவாளர்கள், தொகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மதுபாட்டில், அசைவ உணவுடன் விருந்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்பி சுதாகருக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் சிக்கபெல்லாபூர் லோக்சபா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுதாகர் வெற்றி பெற்று எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

மதுபானம் + கறி விருந்து: பாஜக எம்பி சுதாகரின் தேர்தல் வெற்றியை கொண்டாட அவரது ஆதரவாளர்கள் நீலமங்களா என்ற இடத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அசைவ விருந்துடன் மதுவும் வழங்கப்பட்டுள்ளது. மது பாட்டிலை வாங்க பலரும் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகின.
இலவசமாக மது கொடுக்கப்பட்டதால் பலரும் முண்டியடித்துக் கொண்டு வாங்க முற்பட்டு இருக்கிறார்கள். இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து புரண்டு எழும் சம்பவங்களும் நடந்துள்ளன. கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் என்ன செய்வது என்று தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
டிகே சிவக்குமார் கேள்வி: தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மது ஆறாய் ஓடும் காட்சிகள் வெளியாகி கர்நாடக ஆரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் இச்சம்பவம் தொடர்பாக கூறுகையில், "பாஜகவை சேர்ந்த சுதாகர் எம்.பி. நெலமங்களாவில் கட்சி கூட்டம் நடத்தியுள்ளார். இதில் கலந்து கொண்ட அக்கட்சி தொண்டர்களுக்கு மதுபான பட்டிலை வழங்கியுள்ளனர்.
ஜேபி நட்டா பதில் சொல்லனும்: இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது வேறு விஷயம். அதற்கு முன்பு, இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலளிக்க வேண்டும். மதுபான பாட்டிலை தொண்டர்களுக்கு வினியோகம் செய்து பாஜக நமது கலாசாரத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்" என கூறியுள்ளார்.
எம்பி சுதாகர் விளக்கம்: இதனிடையே தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மது வழங்கப்பட்டது தனக்கு தெரியாது என்று சுதாகர் எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இதுபோன்ற விஷயங்களை நான் ஆதரிப்பது இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவரக்ள் மதுவை எங்கிருந்தோ வாங்கி வந்து இங்கு கொண்டு வந்து குடித்திருக்கலாம்.
எனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் ஒருபோதும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மது வாங்கி கொடுத்தது இல்லை. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. கட்சியினரிடம் இது குறித்து நான் நேற்று இரவு பேசயிருக்கிறேன்" என்று விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications