பெங்களூரு சாலைகளில் கார், பைக் பயன்பாடு 35% அதிகரிப்பு.. கடும் நெரிசல்.. திணறும் டிராஃபிக் போலீஸ்!
பெங்களூரு: சென்னை, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களை போன்று ஐ.டி. நிறுவனங்களின் புகலிடமாக விளங்கும் பெங்களூருவிலும் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத தலைவலியாக இருக்கிறது.
இங்கு காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து வாகனங்களில் செல்வது என்பது இமயமலை சிகரத்தில் ஏறுவது போன்றதாகும். நிலைமை இப்படி இருக்க பெங்களூரு சாலைகளில் கார், பைக் போன்ற தனியார் வாகனங்களின் எண்ணிக்கை 35% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

35% அதிகரிப்பு
பெங்களூரு காவல்துறை நடத்திய முறைசாரா கணக்கெடுப்பின்படி, தனியார் வாகனங்களின் எண்ணிக்கை கொரோனாவுக்கு பிறகு 35% அதிகரித்துள்ளது. ''கிழக்கு பெங்களூரு தவிர, நகரின் அனைத்து பிரிவுகளிலும், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தனியார் வாகனங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இருப்பதாக எங்கள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேலை அதிகரிப்பு
நாங்கள் ஒரு முறையான ஆய்வை நடத்தவில்லை என்றாலும், நகரம் முழுவதும் நடத்தப்பட்ட முறைசாரா கணக்கெடுப்பில், சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையில் 35% அதிகரிப்பு இருந்தது. அதுவும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது'' என்று பெங்களூரு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் பி.ஆர்.ரவிகந்தே கவுடா தெரிவித்தார். இதனால் போக்குவரத்து போலீஸ்காரர்களின் வேலை அதிவேகமாக அதிகரித்துள்ளது. பெங்களூரு நகர போக்குவரத்து வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீசார் போராடி வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களின் தயக்கம்
''கொரோனா தொற்றுநோய் காரணமாக மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த தயங்குகிறார்கள். பெங்களூரு மெட்ரோ ரயில் மற்றும் நகர பேருந்துகளில் இன்னும் வழக்கமான கூட்டம் இல்லை. ஏற்கனவே பெங்களூரு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை ஆதிக்கம் செலுத்தும் நிலையில், கொரோனாவுக்கு பிறகு இந்த ஆதிக்கம் அதிகரித்துள்ளது'' என்றும் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் பி.ஆர்.ரவிகந்தே கவுடா கூறினார்.

10 மில்லியன்
கொரோனா ஊரடங்கு இருந்தபோதிலும், பெங்களூருவில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை ஜனவரி 2021 வரை 10 மில்லியன் என்று சராசரி மதிப்பை மீறியுள்ளதாக மாநில போக்குவரத்துத் துறையால் பகிரப்பட்ட தரவு காட்டுகிறது. இவற்றில், 6.4 மில்லியன் இரு சக்கர வாகனங்கள் ஆகும். 2.3 மில்லியன் தனியார் கார்கள் ஆகும். 2018 முதல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,00,000 புதிய வாகனங்களைச் சேர்த்த பெங்களூரு, 2020-21 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் வாகனங்களை புதிதாக சேர்த்துள்ளது. இது இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கை என்று அந்த தரவு கூறுகிறது.

ஊழியர்கள் பற்றாக்குறை
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பெங்களூரு நகரத்தில் போக்குவரத்து போலீசாரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, பெங்களூரு போக்குவரத்து காவல்துறை 44,000 சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான பணியில் 5,262 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊழியர்கள் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. இந்த பணியிடங்களை அரசு விரைவில் நிரப்பும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

கண்காணிப்பு கேமராக்கள்
பெங்களூரு நகரம் முழுவதும் உள்ள பல்வேறு அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நகரத்தின் 50% க்கும் அதிகமான போக்குவரத்து மீறல்களைப் கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகரத்தில் சுமார் 44,000 சந்திப்புகள் உள்ளன. இவற்றில் அதிநவீன தொழில்நுட்ப சிக்னல்களுடன் 388 சந்திப்புகள் மட்டுமே உள்ளன. அதிகமான நெரிசல் மிகுந்த சாலைகளிலும், சந்திப்புகளிலும் அதிநவீன தொழிநுட்ப சிக்னல்களுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடிந்தால் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்த முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications