போதையில் சண்டை.. சக எம்எல்ஏவைத் தாக்கிய கர்நாடக காங். எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே நடந்த மோதலில், சரமாரியாக தாக்குதல் நடத்திய எம்எல்ஏ கணேஷ் மீது கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது கட்சி மேலிடம்.
கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை சீர்குலைக்க அண்டர்கிரவுண்ட் வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது. இதற்காக ஆபரேஷன் கமலா என்ற பெயரை வைத்து ஏதோ ராணுவ நடவடிக்கை போல வேலை பார்த்து வருகிறது பாஜக

பெருமளவில் பணத்தைக் கொட்டி காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறது. பாஜகவின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்களை பிடதி அருகே உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்க வைத்து அடை காத்தது.
காங்கிரஸ் வசம் 80 பேர் உள்ளனர். அதில் 3 பேர் தவிர மற்ற 77 பேரும் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களில் கணேஷ் மற்றும் அனந்த் சிங் ஆகியோருக்கு இடையே கடும் மோதல் மூண்டது. இருவரும் குடித்து விட்டு நல்ல போதையில் கட்டி உருண்டுள்ளனர்.

இந்த சண்டையில் அனந்த் சிங்கை, கணேஷ் விட்டு வெளுத்து விட்டார். அதில் அனந்த் சிங் படுகாயமடைந்தார். கண்ணெல்லாம் வீங்கிய நிலையில் அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக கணேஷ் மீது அனந்த் சிங் சார்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து தற்போது கணேஷை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தினேஷ் குமார் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications