கர்நாடகாவில் அமலுக்கு வந்தது கட்டாய முக கவசம்- புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடு!
பெங்களூர்: கர்நாடகாவில் பள்ளிக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் முக கவசம் கட்டாய அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிவிட்ட நிலையில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பல மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. கர்நாடகாவிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதி உச்சத்தை அடைந்துள்ளது. ஜப்பான், ஹாங்ஹாங், தைவான், தென்கொரியா என பல நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

சீனாவவின் பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் பேராபத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் மருத்துவமனைகள் நிரம்புகின்றன; மயானங்களில் சடலங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய துயர நிலை உருவாகி உள்ளது. ஒட்டுமொத்த உலகத்தையே சீனாவின் இந்த துயரம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்தியாவிலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமது மன்கிபான் வானொலி நிகழ்ச்சியிலும் குறிப்பிட்டிருந்தார். அதில், உலகின் பல நாடுகளில் கொரோனா பெருகி வருவதை நீங்களும் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் நாம் முககவசம் அணிதல், கைகளைக் கழுவி வருதல் போன்ற முன்னெச்சரிக்கைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்தால், பாதுகாப்பாக இருந்தால், நமது கொண்டாட்டத்தில் எந்தத் தடையும் ஏற்படாது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
மேலும் அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்திருந்தது. கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்வுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நாளை கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்த ஏற்பாடுகளில் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
நமது நாட்டில் 2021-ம் ஆண்டு முதலே கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, கோவாவாக்ஸ் என பல தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறது மத்திய அரசு.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட தொடங்கிவிட்டன. இது தொடர்பாக கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது: கர்நாடகாவில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. திரை அரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதெபோல் மதுபான கூடங்களிலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அனைத்து இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அதிகாலை 1 மணிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் கொரோனா பரவல் தொடர்பாக எந்த பீதியும் அடைய வேண்டியதில்லை. இவை அனைத்துமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான். இவ்வாறு கர்நாடகா அமைச்சர் சுதாகர் கூறினார்.












Click it and Unblock the Notifications