CSK VS RCB.. சென்னை அணியை கிண்டல் செய்து பெங்களூரில் டீ-சர்ட் விற்பனை.. என்ன எழுதியிருக்கு பாருங்க
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சென்னை அணியை கிண்டல் செய்யும் வகையில் பெங்களூரில் டீசர்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சென்னை ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற உள்ளது. இதுவரை லீக் சுற்றில் மொத்தம் 51 போட்டிகள் முடிவடைந்து உள்ளன.

லீக் சுற்றின் 52வது போட்டி இன்று நடைபெற உள்ளது. அதன்படி பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சரியாக விளையாடவில்லை. 10 போட்டிகளில் விளையாடி உள்ள சிஎஸ்கே அணி 2 வெற்றி, 8 தோல்வி என வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி (10வது) இடத்தில் உள்ளது. இதனால் நடப்பு சீசன் ஐபிஎல் போட்டியில் இருந்து சென்னை அணி வெளியேறிவிட்டது.
அதேவேளையில் பெங்களூர் அணி ‛பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. பெங்களூர் அணி 10 போட்டிகளில் 3 தோல்வி, 7 வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெல்லும் பட்சத்தில் ‛பிளேஆப்' சுற்றுக்கும் பெங்களூர் அணி நுழைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகிவிடும். இதனால் இன்றைய போட்டி பெங்களூர் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும்.
அதேவேளையில் கடந்த ஆண்டு மற்றும் நடப்பு சீசனில் சிஎஸ்கேவை, ஆர்சிபி அணி வீழ்த்தி இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க சென்னை அணி காத்திருக்கிறது. இதன்மூலம் ஆர்சிபியின் ‛பிளேஆப்' கனவை நனவாக்குவதில் சிஎஸ்கே பங்கு வகிக்கலாம். இதனால் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
இந்நிலையில் தான் பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியை கிண்டல் செய்யும் வகையில் டீசர்ட் என்பது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல்லில் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணி நிர்வாகம் மீதான ‛ஸ்பாட் ஸ்பிக்சிங்' புகாரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனை குறிப்பிடும் வகையில் தான் தற்போது கருப்பு, வெள்ளை நிறத்தில் டீசர்ட் என்பது பெங்களூரில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் 2016-2017 என்று எழுதப்பட்டுள்ளது. இது சென்னை அணியை சீண்டும் வகையில் இடம்பெற செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கி பலரும் அணிந்து செல்கின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை, பெங்களூர் அணி ரசிகர்கள் இடையே தொடக்கம் முதலே மோதல் இருந்து வருகிறது.
இதுவரை 17 சீசன்களாக ஐபிஎல் போட்டி நடந்தாலும் கூட ஒரு முறை கூட பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. இதனை சொல்லி சென்னை ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களை கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக ‛லாலிபாப்' என்று சொல்லி கிண்டல் செய்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் சென்னை அணி தடை செய்யப்பட்ட ஆண்டை டீசர்ட்டில் குறிப்பிட்டு பெங்களூரில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications