சவூதியில் இருந்து திரும்பிய முதியவர் கர்நாடகாவில் உயிரிழப்பு- கொரோனா தாக்கமா? என ஆய்வு
பெங்களூர்: சவூதியில் இருந்து திரும்பிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது கர்நாடகா முதியவர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தாரா? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னமும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ முடிவும் அறிவிக்கப்படவில்லை.
Recommended Video
சீனாவையே ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தற்போது அன்டார்டிகா தவிர்த்து ஏனைய கண்டங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
இந்த வைரஸ் சீனாவை விட 8 மடங்கு வேகமாக மற்ற நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது. இதனால் சாதாரண காய்ச்சல் என்றாலே மக்கள் அச்சம் கொண்டனர்.
கொரோனா வைரஸ்
இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேற்கண்ட மாநிலங்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கர்நாடகாவில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
ஆய்வுகள்
இந்த நிலையில் கர்நாடகாவின் கலபுர்கியை சேர்ந்தவர் 76 வயது முதியவர். இவர் அண்மையில் சவூதி அரேபியாவிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த முதியவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தாக்கத்தால் அவர் உயிரிழந்தாரா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இறந்த முதியவர்
இதுகுறித்து கலபுர்கி மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஜாபர் கூறுகையில் முதியவர் இறந்தது உறுதி. ஆனால் அவர் கொரோனாவால்தான் இறந்தாரா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை. புனேவில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அந்த முதியவரின் ரத்த மாதிரிகளை அனுப்பியுள்ளோம். ஆனால் அந்த முடிவுகள் கிடைப்பதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தார்.
60 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்தது. கேரளாவில் 8 பேருக்கும் ராஜஸ்தான், டெல்லியில் தலா ஒருவருக்கும் ஆக மொத்தம் இந்தியாவில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.