ஹிஜாப் வழக்கு: கூடுதல் பெஞ்சுக்கு மாற்றி கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் உத்தரவு
பெங்களூர்: ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கூடுதல் பெஞ்சுக்கு மாற்றி கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தனிநீதிபதி கிருஷ்ணா தீட்சித் இன்று உத்தரவிட்டுள்ளார்.
உடுப்பி மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்றனர். இதனையடுத்து இந்துத்துவா அமைப்பு மாணவிகள் காவி ஷால் அனிந்து கல்லூரிக்கு சென்றனர். இதனால் சர்ச்சை வெடித்தது.

அத்துடன் கர்நாடகாவின் பல இடங்களில் ஹிஜாப்- காவி உடை என மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. அத்துடன் தலித் மாணவர்கள் நீல நிற ஷால் அணிந்தும் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஹிபா அணியும் மாணவிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது.
இதனிடையே வகுப்பறைகளில் மட்டும் ஹிஜாப்பை அகற்ற வேண்டும் சில கல்லூரி நிர்வாகங்கள் உத்தரவிட்டன. இதற்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது. கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி கிருஷ்ணா தீட்சித் இந்த வழக்கை விசாரித்தார்.
இந்த விசாரணையின் போது, அரசியல் சாசனம் என்பது பகவத் கீதை போன்றது. நான் அரசியலமைப்பு சட்டத்தின் மீது பிரமாணம் செய்திருக்கிறேன். உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அரசியல் சாசனப்படி நடந்து கொள்வேன் என்றும் கிருஷ்ணா தீட்சித் கூறியிருந்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் தேவதத் காமத், அரசு தரப்பில் நாவடி ஆகியோர் வாதிட்டனர்.
இன்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, வழக்கை கூடுதல் பெஞ்சுக்கு மாற்றி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் உத்தரவிட்டார். ஏற்கனவே இவ்வழக்கு விசாரணை முடியும் வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications