ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறப்பு - உடுப்பியில் 144 தடை
கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்கப்படும்.
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் இன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைமையை கண்காணித்த பிறகு உயர்கல்வி மற்றும் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளை சுற்றியும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் கர்நாடகா மாநிலத்தில் தீவிரமடைந்தது. நிலைமையை கட்டுப்படுத்து வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை.
இந்த விவகாரம் மாநில உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டது.
பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு அமல்; ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
உச்சநீதிமன்றம் விசாரணை
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மனு தாக்கல் செய்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரினர். எனினும் உச்ச நீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். உச்சநீதிமன்றத்தில் இன்றைய தினம் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
இந்த சூழ்நிலையில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளை மீண்டும் திறக்க முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் இன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்கப்படும். அனைத்து மாவட்ட காவல் துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரிடம் அமைதி குழு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
பிப்ரவரி 16ல் கல்லூரிகள்
11ஆம் வகுப்பு முதல் அனைத்துப் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 16ஆம் தேதி வரையில் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிலைமையை கண்காணித்த பிறகு உயர்கல்வி மற்றும் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும். 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறந்த பிறகு மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உடுப்பியில் 144 தடை உத்தரவு
இன்று பள்ளிகள் திறக்க உள்ளதால் ஹிஜாப் பிரச்னை உருவான உடுப்பி மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளை சுற்றியும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் 19ஆம்தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உடுப்பி மாவட்ட காவல்துறை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.