3 நாட்களுக்கு மிக அதிக கனமழை.. குடகு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஜூலை 18, 19, 20 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதாலும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டியும் இந்திய வானிலை மையம் முறையே சிவப்பு மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறுகையில் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணனூர், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வந்தால் இயற்கை பேரிடர்களான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியன நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே எச்சரிக்கையாக இருக்கும் படி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பீகார், அசாம், மேகாலயா மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி வருகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோரத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.