காவிக்கொடி தேசிய கொடியாகலாம்..செங்கோட்டையில் ஏற்றப்படும்..கர்நாடக பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு
பெங்களூரு : கர்நாடகாவில் தேசிய கொடி கம்பத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையில் காவிக் கொடி ஏற்றப்படும் நாள் வரும் எனவும், காவிக்கொடி நம் நாட்டின் தேசிய கொடியாகவும் மாறக்கூடும் என கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியுள்ளது சர்ச்சையை மேலும் கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த மாதம் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய பிரச்சனை உருவானது. அங்குள்ள அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த போது வகுப்பில் அமர கூடாது என கல்லூரி நிர்வாகம் கூறியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ-மாணவியர்களை சிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கினர்.
ஹிஜாப் எங்கள் தலையை தான் மறைக்கிறது, மூளையை அல்ல.. நேருக்கு நேர் சீறிய மாணவி.. நழுவிய பாஜக அமைச்சர்
மீண்டும் சர்ச்சை
உச்சகட்டமாக இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து காவி துண்டு அணிந்திருந்த இந்துத்துவ மாணவர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறினர். உடனே வெகுண்டெழுந்த அந்த மாணவி அல்லாஹு அக்பர் என முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் உச்சகட்ட பரபரப்பாக கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்தது.
தேசிய கொடி அவமதிப்பு
கல்லூரி வளாகத்தில் இருந்த தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்த கம்பத்தில் ஏறிய மாணவர் ஒருவர் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவி கொடியை பறக்க பட்டுள்ளார். அப்போது அங்கு இருந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் மாணவர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறது.
செங்கோட்டையில் காவிக் கொடி
இந்நிலையில் கர்நாடகாவில் தேசிய கொடி கம்பத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையில் காவிக் கொடி ஏற்றப்படும் நாள் வரும் எனவும், காவிக்கொடி நம் நாட்டின் தேசிய கொடியாகவும் மாறக்கூடும் என கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியுள்ளது சர்ச்சையை மேலும் கிளப்பியுள்ளது. கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, செய்தியாளர்களிடம் பேசிகையில், எந்த கொடி கம்பத்திலும் காவிக்கொடி ஏற்றுவோம். உணர்வு உள்ளவர்கள் அதை மதிக்க வேண்டும். முன்பு, அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டப்படும் என்று சொன்னால் மக்கள் சிரித்தனர், இப்போது அயோத்தியில் கோயில் கட்டவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
எந்த இடத்திலும் கவிக் கொடி
"உலகில் எந்த இடத்திலும் காவிக்கொடி ஏற்றுவோம். காவி சால்வை அணிய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,'' என்ற அவர், காவி சால்வைகளை விநியோகிப்பதில் என்ன தவறு இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவும், சிவக்குமாரும் காவியைப் பற்றி கேள்விப்படும்போது பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள். "கிறிஸ்தவ பள்ளிகளுக்கு சீருடை இல்லாமல் போகலாமா? இதற்கு சிவகுமார் பதில் சொல்ல வேண்டும் என்ற அவர், நான் காவி சால்வைகளை விநியோகிக்க தயாராக இருக்கிறேன். நான் சுதந்திர இந்தியாவில் இருக்கிறேன். என் சுதந்திரத்தை கேள்வி கேட்க அவர்கள் யார்? நான் காவி சால்வைகளை விநியோகிக்கவில்லை, ஆனால்அவற்றை விநியோகம் செய்தால், அதில் என்ன தவறு? எனவும் ஈஸ்வரப்பா பேசியுள்ளார்.