பாஜகவுக்கு காங்கிரஸ், மஜத செம பதிலடி.. கர்நாடக அரசை காப்பாற்ற கையில் எடுத்த 'காமராஜர் பார்முலா'
Recommended Video
பெங்களூர்: கர்நாடகா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்து, இன்று அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அதில் 11 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இதனால், ஆட்சிக்கு ஆபத்து அதிகரித்த நிலையில், அமைச்சர் நாகேஷ் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும், ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அவர் ஆளுநரிடம் கடிதம் அளித்தார்.
இதுவரை எம்எல்ஏக்கள்தான் ராஜினாமா செய்தனர், இன்று அமைச்சரும் ராஜினாமா! கவிழும் நிலையில் கர்நாடக அரசு
ஆட்சி கவிழும் நிலை
சுயேச்சை எம்எல்ஏ வான நாகேஷுக்கு, குமாரசாமி அரசில் கடந்த மாதம்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவரும் அரசை கைவிட்டுவிட்டு, பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். எனவே எப்படி இருந்தாலும் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற நிலைக்கு வந்துவிட்டதால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விடலாம் என்று முடிவு எடுத்தனர்.
|
அமைச்சர்கள் கூட்டம்
பெங்களூர் சதாசிவம் நகரில் உள்ள துணை முதல்வர் பரமேஸ்வர் (காங்கிரஸ்), இல்லத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. சிற்றுண்டி விருந்துடன் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பரமேஸ்வர் அழைப்புவிடுத்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்து ஆளுநரிடம் கடிதம் அளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். மொத்தம் 21 அமைச்சர்களும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இன்று மதியம் அறிவித்தார்.
|
மஜதவும் முடிவு
இதன் மூலம், புதிதாக அமைச்சரவையை உருவாக்கலாம், அதில், அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுக்கலாம், இதன் மூலம் அவர்கள் ஆதரவை மீண்டும் பெற்று ஆட்சியை தக்க வைக்கலாம் என்பது தான் காங்கிரஸின் திட்டமாக உள்ளது. இதன்பிறகு மாலையில் மதசார்பற்ற ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 9 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். முதல்வர் அலுவலகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. விரைவில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்றும் முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் அறிவித்தது.
காமராஜர் பார்முலா
காங்கிரஸ் கூட்டணியின் இந்த திட்டத்தை 'காமராஜர் பார்முலா' என கர்நாடக அரசியல் பார்வையாளர்கள் வர்ணிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை வளர்க்க தமிழக முன்னாள் முதல்வர், காமராஜர் அமைச்சரவை ராஜினாமா செய்ததை போல, ஆட்சியை காப்பாற்ற, கர்நாடக காங்கிரஸ் திட்டம் வைத்துள்ளதாக கர்நாடக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் இந்த பதிலடி தந்திரம் பலிக்குமா அல்லது பாஜகவின் தந்திரம் வெல்லுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.