ஸ்மோக் பீடா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை.. இது எதனால் ஏற்படுகிறது.. மருத்துவர்கள் வார்னிங்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூர் திருமண நிகழ்ச்சியில் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பீடா சாப்பிட்ட சிறுமிக்கு திடீரென வயிற்றில் ஓட்டை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தாவணகெரேவில் ஸ்மோக் பிஸ்கட் எனப்படும் திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்ட சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சிறுவன் பிஸ்கட்டை சாப்பிட்ட உடன் வயிற்று வலியில் அலறி துடித்தார். இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு ஷாக் சம்பவம் மீண்டும் கர்நாடகாவில் நடந்துள்ளது.
ஸ்மோக் பீடா: பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பீடா வழங்கப்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் அங்கு அனைவருக்கும் அதை வழங்கியுள்ளனர். அப்போது 12 வயது சிறுமி ஒருவர் இந்த ஸ்மோக் பீடாவை ஆசையாக வாங்கி சாப்பிட்டுள்ளார். இருப்பினும், ஸ்மோக் பீடாவை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை ஏற்பட்டுள்ளது.
ஸ்மோக் பீடாவை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு பெர்ஃபோரேஷன் பெரிட்டோனிடிஸ், அதாவது வயிற்றில் துளை என்ற நிலை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
மருத்துவர்கள்: இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "நாங்கள் சிறுமியைப் பரிசோதித்தபோது, வயிற்றில் பிரச்சினை இருந்தது தெரிய வந்தது. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதிகமாக வாயு நிரம்பி இருந்தது. சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் காப்பாற்ற முடிந்தது. இல்லையென்றால் இது அவரது உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதையடுத்து நாங்கள் அச்சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம்" என்றார்.
அறுவைசிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த பிரச்சினையைச் சரி செய்துள்ளனர். இதனால் சிறுமி மூன்று நாட்கள் ஐசியூவில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம்: இப்போதெல்லாம் நாம் சாப்பிடும் உணவைத் திரவ நைட்ரஜனில் போட்டு எடுத்துத் தருகிறார்கள். இது புதுவித டேஸ்ட்டை தருவதால் இதுபோல அவர்கள் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது ரொம்பவே பிடித்துப் போகிறது. ஏனென்றால் திரவ நைட்ரஜன் உடன் இருக்கும் பொருட்களைச் சாப்பிட்டால் சில நொடிகள் வாயில் இருந்து ஸ்மோக் வரும். சமூக வலைத்தளங்களில் இதை வீடியோவாக எடுத்துப் பகிர வேண்டும் எனப் பலரும் நினைப்பதாலேயே இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
திரவ நைட்ரஜனுக்கு மிகக் குறைந்த கொதிநிலையைக் கொண்டது. எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நமது தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியல்.. அதாவது தண்ணீரை 100 டிகிரி செல்சியஸுக்கு சூடுபடுத்தினால் தான் அது நீராவியாக மாறும். ஆனால், திரவ நைட்ரஜன் மைனஸ் 196 டிகிரி செல்சியஸிலேயே ஆவியாகிவிடுகிறது. இதன் காரணமாகவே அதை உணவுகளில் மிக்ஸ் செய்து தருகிறார்கள்.
திரவ நைட்ரஜன்: இந்தளவுக்குக் குளிரான ஒரு வாயு பொதுவாகத் தோலில் படும்போது அது தீக்காயத்தைப் போன்ற விளைவுகளை உருவாக்குகிறது. இவை கண்ணில் பட்டால் கண் பாதிப்பையும் ஏற்படுத்தும். இதனால் மூச்சுத்திணறல் அல்லது இரைப்பை துளைகளில் கூட பாதிப்பு ஏற்படும். சுமார் 2 மில்லிகிராம் திரவ நைட்ரஜனை நாம் சாப்பிட்டால் கூட அது 1.5 லிட்டர் வாயுவை வெளியேற்றும். அப்படியிருக்கும் போது அதை நாம் சாப்பிட்டால் வயிற்றில் அதிகப்படியான வாயு சேர்ந்து வயிற்றில் ஓட்டை விழும் அளவுக்குக் கூட ஆபத்து இருக்கிறது.
தமிழ்நாடு அரசு: ஏற்கனவே சாப்பிடும் உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜனை நேரடியாகப் பயன்படுத்தத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களில் உறைதல் பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது.
மேலும் திரவ நைட்ரஜன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுப் பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை, 2011இன் படி Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த முடியும். அதை நேடியாக உணவில் கலந்து பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து இருந்தது. இதுபோல மற்ற மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற ஆபத்துகள் குறையும் என்கிறார்கள் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications