பெங்களூர் வெள்ளத்தால் பெரும் நஷ்டம்.. தத்தளிக்கும் ஐடி நிறுவனங்கள்.. இன்றே அமைச்சருடன் ஆலோசனை
பெங்களூர்: கடும் மழை காரணமாக கடந்த சில நாட்களாக வெள்ளத்தில் தத்தளித்த பெங்களூர் நகரம் தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில் மாநகரில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதையடுத்து பெங்களூருவாசிகள் மீண்டும் கவலைகொள்ள தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் இன்னல்களை சந்தித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை அம்மாநில அமைச்சர் இன்று நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிகிறார்.

குடிநீர் விநியோகம் பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து பெங்களூருவில் இம்மாத தொடக்கத்திலிருந்தே மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றுள்ளது. இது கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது மாநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையத்திலும் வெள்ளம் சூழ்ந்ததால், குடிநீர் விநியோகமும் இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்டிருந்து.

இயல்பு நிலையில் சாலை போக்குவரத்து
மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் மக்களை படகில் சென்று மீட்பு படையினர் மீட்டனர். ஆனால் தற்போது மழை குறைந்துள்ளதால், மாநகரில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல டிராக்டர்களையே பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல சாலைகளில் தேங்கியிருந்த வெள்ள நீரும் வடியத் தொடங்கியதையடுத்து சாலை போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பி வருகிறது.

கலந்துரையாடல்
இந்நிலையில், கர்நாடக அமைச்சர் சிஎன் அஸ்வத்நாராயணன் இன்று பிற்பகல் ஐடி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து மழை காரணமாக இந்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளார். இந்த கலந்துரையாடலில் தலைமைச் செயலர் வந்திதா சர்மா, பெங்களூரு சிவில் ஆணையர் துஷார் கிரிநாத், நகர நீர் ஆணையம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் சிஎச் பிரதாப் ரெட்டி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

பங்கேற்கும் நிறுவனங்கள்
இன்ஃபோசிஸ், விப்ரோ, நாஸ்காம், கோல்ட்மேன் சாக்ஸ், இன்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பிலிப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என அமைச்சர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். தென்னிந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே மழை நீர் வடிகால்கள் இயற்கையிலேயே அமைந்துள்ளன. அதில் கர்நாடகாவின் பெங்களூரு முக்கியமான நகரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications