திடீர் நிலச்சரிவு.. புதைந்துபோன சகோதரிகள்.. கைகள் கோர்த்தபடி பிணமாக மீட்பு.. சோகத்தில் கர்நாடகம்
பெங்களூர்: கர்நாடகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதைந்த சகோதரிகள் 2 பேர் கைகள் கோர்த்தபடி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
குறிப்பாக பெங்களூரில் இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. கடலோர கர்நாடக மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடலோர மாவட்டங்கள் பாதிப்பு
இதனால் கடலோர கர்நாடக மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன. தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு காரணமாக மொத்தம் 6 பேர் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர கன்னடாவில் 4 பேர் பலி
உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதில் முண்டள்ளி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்த ஆனந்தநாராயணா (வயது 48), அவரது மகள் லட்சுமி (33), மகன் ஆனந்த் (32), பிரவீன் (20) ஆகியோர் மண்ணில் புதைந்தனர். மழை அதிகமாக பெய்தது, சாலை சேதம் உள்ளிட்ட காரணங்களினால் மீட்புபணி தடைப்பட்டது. அதன்பிறகு தாமதமாக மீட்பு பணி நடந்தது. இதில் ஆனந்த நாராயணா, லட்சுமி, ஆனந்த் ஆகியோரின் உடல் மீட்கப்பட்டது. பிரவீன் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

மண்ணில் புதைந்த சகோதரிகள்
இதேபோல் தட்சின கன்னடா மாவட்டம் சுப்பிரமணியபுரா அருகே பர்வதமுகி பகுதியில் குசுமதார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ருதி (வயது 11), ஞானஸ்ரீ (6) என்ற மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து ஸ்ருதி பாடம் படித்து கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்களின் வீட்டை மண் மூடியது. இதில் 2 சிறுமிகள் மாயமாகினர்.

பிணமாக மீட்கப்பட்ட சகோதரிகள்
இதுபற்றி போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுமிகளை பத்திரமாக மீட்க முயன்றனர். இருப்பினும் இந்த மீட்பு பணி எளிமையாக அமையவில்லை. மழை பெய்தது மற்றும் அதிகளவில் மண் சரிந்தது உள்ளிட்டவற்றால் இந்த மீட்பு பணி பெரும் சவாலாக அமைந்தது. இருப்பினும் பலமணிநேரம் போராடி இரண்டு சிறுமிகளையும் மீட்டனர். மண்ணில் புதைந்து அதிக நேரம் ஆனதால் இரு சிறுமிகளும் இறந்திருந்தது தெரியவந்தது.

கைகளை கோர்த்தபடி உடல் மீட்பு
மேலும் இரு சிறுமிகளும் மண்ணில் அருகருகே கைகளை இறுக்கமாக கோர்த்த நிலையில் கிடந்தனர். அதாவது மண் சரிவில் சிக்கிய நிலையில் உயிருக்கு பயந்த சிறுமிகள் இருவரும் ஒருவரின் கையை இன்னொருவர் இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் தங்களை மூடிய மண்ணை விட்டு வெளியே வர முயன்ற முயற்சி தோல்வியடைந்ததால் மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது.

விபத்து நடந்தது எப்படி?
நேற்று முன்தினம் மாலையில் ஸ்ருதி வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள ஹாலில் இருந்து படித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பயங்கரமான சத்தம் கேட்டது. வீட்டில் இருந்து சத்தம் வருவதாக நினைத்த ஸ்ருதி வீட்டுக்குள் சென்றார். இந்த வேளையில் அவரை பின்தொடர்ந்து சகோதரி ஞானஸ்ரீயும் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீட்டை மண் மூடியது. இதில் 2 சிறுமிகளும் மண்சரிவில் சிக்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்துள்ளது. முன்னதாக சமையல் அறையில் இருந்த அவர்களின் தாயார் பயங்கரமான சத்தம் வீட்டுக்கு வெளியே வருவதாக நினைத்து குழந்தைகளை மீட்கும் நோக்கில் வெளியே வந்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications