காவிரி பக்கம் போகாதீங்க.. தேக்க முடியாமல் தண்ணீர் திறப்பை அதிகரித்த கர்நாடகா! பொங்கி வரும் வெள்ளம்
பெங்களூர்: கர்நாடகாவில் பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் காவிரியில் 2.31 லட்சம் கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 61,000 கன அடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருகிறது.
தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நீர் ஆதாரம் என்பது கர்நாடகா அணைகளாகும். கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் எனும் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகள் தான் காவிரி ஆற்றில் நீர் ஆதாரமாக உள்ளன. இந்நிலையில் தான் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை என்பது தற்போது வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இன்று காலை 8 மணி நிலவரப்படி கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 123.25 அடியாக (மொத்த உயரம் 124.80 அடி) உள்ளது. அதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 2281.21 அடியா (மொத்த உயரம் 2284.00 அடி) நிரம்பி உள்ளது.
இன்று காலையில் கபினி அணைக்கு 54,137 கனஅடி வந்த நிலையில் அணையில் இருந்து 70,750 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் கேஆர்எஸ் அணைக்கு உள்ளே 95,502 கனஅடி நீர் வந்த நிலையில் அணையில் இருந்து 1 லட்சத்து 3 ஆயிரத்து 222 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அணைகளுக்கான நீர் வரத்து இன்னும் அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளுக்கு வரும் தண்ணீர் என்பது அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
அதன்படி காவிரியில் 2.31 லட்சம் கன அடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 61,000 கன அடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டின் ஒகேனக்கல்லுக்கு 1.31 லட்சம் கன அடிநீர் வரத்து இருக்கிறது. கர்நாடகாவில் நீர் திறப்பு என்பது அதிகரித்துள்ளதால் விரைவில் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு என்பது கிடுகிடுவென அதிகரிக்க உள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அசம்பாவிதங்களை தடுக்க காவிரி கரையோரங்களில் உள்ள மக்கள் ஆற்றின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையில் இருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கலாம் என்பதால் தமிழ்நாட்டின் காவிரி ஆற்றின் கரையோரத்தின் 11 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பாக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications