என்னது.. நாங்க என்ன செஞ்சோமா? இந்தாங்க சாதனை பட்டியல்! பாஜகவை சல்லி சல்லியாக நொறுக்கிய பிரியங்கா!
பெங்களூரு: கர்நாடகாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, 70 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று பாஜகவினர் எங்களை பார்த்து கேட்கிறார்கள்? கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று ஏன் பொதுமக்களிடம் கூறவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டார்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளிலும், 26ஆம் தேதி 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலானது நடைபெற்ற நிலையில், நாளை 10 மாநிலங்களில் 3ஆம் கட்ட வாக்குப் பதிவு நடக்கிறது.

அசாம், பிகார், சத்தீஸ்கர், தத்ரா நகர் ஹவேலி மற்றும் டையு டாமன், கோவா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.
பிரியங்கா காந்தி: அங்கு நேற்றுடன் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக மாலை 6 மணிக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முன்னதாக கர்நாடக மாநிலம் தாவெணகரே மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், அமைச்சர் மல்லிகார்ஜுனின் மனைவி பிரபா மல்லிகார்ஜுனை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடி: பிரசாரத்தில் பேசிய பிரியங்கா,"மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எப்போதுமே மகளிர், விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. தேர்தல் நேரத்தில், இரண்டு மாநிலங்களின் முதல்வர்களை சிறையில் அடைத்துள்ளார். பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், எத்தனை பள்ளி, கல்லூரிகள் திறந்தார், எத்தனை சாலைகள் போட்டார், எத்தனை மருத்துமனைகள் கட்டினார் என்று மக்களுக்கு சொல்லவில்லை.
காங்கிரஸ் செய்தது: ஆனால் 70 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று எங்களை பார்த்து கேட்கிறார்கள்? நாங்கள் நாடு முழுவதும் ஐஐஎம்களை கட்டினோம், ஐஐடி கட்டினோம், எய்ம்ஸ் கட்டினோம், எச்ஏஎல், பெல் கட்டினோம், பக்ரா நங்கல் போன்ற பெரிய அணைகளைக் கட்டினோம், பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், SAIL, NTPC, ONGC, BPCL, COAL INDIA, ISRO, DRDO - எதுவாக இருந்தாலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தை காங்கிரஸ் உருவாக்கியது.
நீங்கள் என்ன சாதித்தீர்கள்?: கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்று ஏன் பொதுமக்களிடம் கூறவில்லை? பிரதமரது அனைத்து பேரணிகளும் அவரது பணக்கார தொழிலதிபர் நண்பர்களுடன் தான் நடக்கிறது. நமது நாட்டின் ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவை இப்போது ஒரு மனிதனின் கைகளில் இருப்பதில் ஆச்சரியமில்லை.
பாலியல் வன்கொடுமை: நூற்றுக்கணக்கான மகளிரை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் கையை பிடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். பாலியல் வன்கொடுமை விஷயம் பகிரங்கமானதும், அந்த நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். எந்த அரசியல்வாதி எங்கு செல்வார் என்று அறிந்த மோடிக்கு, அந்த நபர் நாட்டை விட்டு வெளியேறியது தெரியாதது போல் நடிக்கிறார். மகளிரை பாதுகாக்க வேண்டும் என்று கூறும் அவர், பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்" என பேசினார்.












Click it and Unblock the Notifications