கர்நாடகாவில் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார் !தமிழகம், கேரளாவில் நிறைவு!
பெங்களூர்: தமிழகம், கேரளாவில் தமது பாதயாத்திரையை நிறைவு செய்த ராகுல் காந்தி இன்று காலை முதல் கர்நாடகா மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்காக வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரையை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி பின்னர் கேரளாவில் பயணம் மேற்கொண்டார். கேரளாவில் மொத்தம் 19 நாட்கள் ராகுல், நடைபயணம் மேற்கொண்டார். கேரளாவில் ராகுல் காந்தியின் பயணத்துக்கு மிகப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. இதன்பின்னர் நேற்று மீண்டும் தமிழகத்தின் கூடலூரில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
இன்று காலை முதல் கர்நாடகாவில் ராகுல் பயணத்தை தொடங்கி உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 21 நாட்கள் ராகுல் நடைபயணம் மேற்கொள்கிறார். கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் மைசூரு, மாண்டியா, ராய்ச்சூர் வழியாக தெலுங்கானா செல்கிறது. இதன் ஒருபகுதியாக பல்லாரியில் வரும் 19-ந் தேதி பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
மேலும் தசரா கொண்டாட்டங்களுக்காக ராகுல் தமது பயணத்தில் 2 நாட்கள் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். கர்நாடகா பாதயாத்திரையின் போது சோனியா காந்தி அல்லது பிரியங்கா பங்கேற்க சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தி மொத்தம் 3038 கி.மீ நடைபயணம் மேற்கொள்கிறார். தற்போது வரை 532 கி.மீ பாதயாத்திரையை ராகுல் நிறைவு செய்திருக்கிறார்.
முன்னதாக தமிழகத்தின் கூடலூரில் நேற்று பேசிய ராகுல் காந்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளில் தலையிடுகிற போக்கு உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசுகளில் தலையிட ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரே மொழி, ஒரே நாடு என்கிறது பாஜக. நமக்கு ஒற்றுமை தேவை என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.. இதை ஏற்க முடியாது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.