ஒரே நாளில் வரப்போகும் சசிகலா, இளவரசி, சுதாகரன்? வரவேற்பு எப்படி இருக்க போகுது தெரியுமா?
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வரும் 27ம் தேதி ஒரே நாளில் விடுதலையாவார்கள் என கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக வரவேற்க ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூன்று பேருக்கு தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதா காலமானதால் அவர் தண்டைனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேநேரம் சசிகலா, இளவரசி , சுதாகரன் ஆகிய 3 பேருக்கான தண்டனையை உச்ச நீதிமன்றம் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி உறுதி செய்து உத்தரவிட்டது.
நிறைவு பெறுகிறது
அதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 4 வருடங்களாக சிறையில் உள்ள இவர்களின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
சசிகலா கட்டினார்
இதனிடையே சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகைக்கான வங்கி வரையோலை (டிடியை) பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி வக்கீல் சி.முத்துகுமார் செலுத்தினார். இளவரசிக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான டிடியை வக்கீல்கள் அசோகன், பி.முத்துகுமார் ஆகியோர் கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி நீதிமன்றத்தில் செலுத்தினர். சுதாகரன் செலுத்த வேண்டிய ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான அபராத தொகை செலுத்தப்படாமல் உள்ளது. இவ்வார இறுதிக்குள் முறைப்படி அபராத தொகையை செலுத்த சுதாகரன் தரப்பு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
சுதாகரனும் முடிவு
முன்னதாக சுதாகரன் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ளதால், அவரை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை நடத்திய தனி நீதிமன்றம், குற்றவாளி செலுத்த வேண்டிய அபராத தொகை செலுத்தினால் விடுதலை செய்யும்படி சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அபராத தொகை உடனடியாக செலுத்தினால் சசிகலா , இளவரசி ஆகியோருக்கு முன் சுதாகரன் விடுதலையாவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபராதத்தை இந்த வாரத்தில் தான் கட்ட உள்ளதுடன் மூன்று பேரும் வரும் 27ம் தேதி ஒரே நாளில் விடுதலையாக தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமமுக அதிரடி
சசிகலா விடுதலையாக ஒரு வாரமே உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தமிழக மற்றும் கர்நாடக மாநில அமமுக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கோலார் மாவட்ட அமமுக செயலாளர் சகாயராஜ் தலைமையில் அமமுகவினர் பரப்பன அக்ரஹாரா சிறை தொடங்கி கர்நாடக-தமிழக எல்லையான ஓசூர் வரை வரவேற்பு பேனர்கள் வைக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
காரில் வருகிறார்
சசிகலா உள்பட மூன்று பேரையும் வரும் 27ம் தேதி மாலை 6 மணிக்கும் சிறை நிர்வாகம் விடுதலை செய்யும் என்று கூறப்படுகிறது. ஆனால் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு 9.30 மணிக்கு மேல் சிறை வளாகத்தில் இருந்து அனுப்பி வைக்க மாநகர போலீஸ் கமிஷனர் முடிவு செய்துள்ளாராம்.. இரவில் சசிகலா விடுதலை செய்யப்படுவதால், அவரை காரில் சென்னை அழைத்து செல்லாமல், சூளகிரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இரவு தங்கி ஓய்வெடுக்க செய்தபின், அதிகாலையில் சென்னை அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது-