Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்எல்ஏ பதவி வேண்டாம்! சித்தராமையா, டிகே சிவக்குமார் முன் பகீர் மிரட்டல்! கர்நாடகாவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் மூத்த தலைவர் ஒருவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் முன்பு மிரட்டல் விடுத்த நிலையில் அவருக்கு ஆதரவாக மேலும் சில எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

கர்நாடகா மாநிலத்துக்கு கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவரான டிகே சிவக்குமாரும் செயல்பட்டு வருகின்றனர்.

 Senior Karnataka MLA BR Patil threatens to quit in Congress Legislature party Meeting

முதல்வர் பதவி வேண்டும் என டிகே சிவக்குமார் போர்க்கொடி தூக்கிய நிலையில் மேலிடம் அவரை சமாதானப்படுத்தியது. இதையடுத்து தான் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைத்தது. இருப்பினும் கூட டிகே சிவக்குமாரை சமாதானப்படுத்துவது என்பது மேலிடத்துக்கு பெரிய பிரச்சனையாக மாறிப்போனது.

இத்தகைய சூழலில் தான் தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் எம்எல்ஏக்களாக உள்ள மூத்த தலைவர்கள் அமைச்சர்கள் மீது கோபம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தில் பகிரங்கமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள ஓட்டலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது. முதல்வர் சித்தராமையா தலைமை வகித்த நிலையில் துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதம் பற்றி விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் மூத்த ஒருவரும் கலபுரகி மாவட்டம் ஆலந்த் தொகுதி எம்எல்ஏவுமான பிஆர் பட்டீல், யஷ்வந்த் ராயகவுடா, பசவராஜ் ராயரெட்டி உள்ளிட்ட சிலர் கையெழுத்திட்டு அந்த கடிதத்தை அனுப்பி இருந்தனர். அதில் அமைச்சர்கள் தங்களை மதிப்பது இல்லை. எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் என தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த கடிதம் வெளியே கசிந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடையே அதிருப்தி உள்ளதாக தகவல்கள் பரவியது.

இது விவாதப்பொருளானது. இதையடுத்து சித்தராமையா கடிதம் எழுதிய எம்எல்ஏக்களை கண்டித்தார். உங்களின் கோரிக்கையை நேரில் என்னிடம் கூறி இருக்கலாம். கடிதம் எழுத வேண்டிய தேவையில்லை. மேலும் அந்த கடிதம் எப்படி வெளியே கசிந்தது என கேள்விகள் கேட்டு கண் சிவந்தார்.

இத்தகைய சூழலில் தான் எம்எல்ஏ பிஆர் பட்டீல், ‛‛என்னை குற்றவாளியாக்க வேண்டாம். நான் நடைமுறையில் உள்ளவற்றை உங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். இதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை. எனக்கு சுயமரியாதை உள்ளது. அமைச்சர்கள் எங்களையும் மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்எல்ஏ பதவியே வேண்டாம். நான் ராஜினாமா செய்கிறேன்'' என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத சித்தராமையா ஷாக்காகி போனார்.

மேலும் எம்எல்ஏ பிஆர் பட்டீலுக்கு ஆதரவாக யஷ்வந்த் ராயகவுடா, பசவராஜ் ராயரெட்டி, வினய் குல்கர்னி, சிஎஸ் நாடகவுடா, ஹமானபனகவுடா உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர். மேலும் பிஆர் பட்டீல் எம்எல்ஏ கூட்டத்தில் இருந்து வெளியே செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அமர வைத்துள்ளார்.

இதையடுத்து சித்தராமையா, ‛‛உங்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன். அவசரப்பட வேண்டாம். மாதந்தோறும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறேன். அப்போது குறைகளை நேரில் கூறுங்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும். ஏனென்றால் மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து நம்மை தேர்வு செய்து உள்ளனர்'' என சமாதானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது கர்நாடகா அரசியலில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

இருப்பினும் எம்எல்ஏக்கள் அதிருப்தி, ராஜினாமா மிரட்டல் பற்றி மூத்த தலைவர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். முதல்வர் சித்தராமையா, போலீஸ் அமைச்சர் பரமேஸ்வர், கார்கேவின் மகனும், அமைச்சருமான பிரியங்க் கார்கோ உள்ளிட்டோர், ‛‛எம்எல்ஏக்களின் கூட்டம் அமைதியாக நடந்தது. யாருக்கும் அதிருப்தி இல்லை'' என கூறி சென்றனர்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ள பிஆர் பட்டீல் கலபுரகி மாவட்டம் ஆலந்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கலபுரகி என்பது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உள்ளார். பிரியங்க் கார்கே மற்றும் பிஆர் பட்டீல் ஆகியோர் இடையே மனஸ்தாபம் இருப்பதாக கூறப்படும் நிலையில் தான் இந்த பிர்ச்சனை வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்து 2 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இத்தகைய சூழலில் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் சில தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 5 ஆண்டு ஆட்சியையும் நிறைவு செய்து கரை சேருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் உண்மையில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்த பல மூத்த தலைவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+