முடா விவகாரம்.. "என்னை காலி செய்ய பாஜக செய்யும் சதி இது!" கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதிலடி
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவிக்கு முடா அமைப்பு சட்டவிரோதமாக வீட்டு மனைகளை ஒதுக்கியதாக எழுந்த புகாரில், விசாரணைக்குத் தடை விதிக்க கர்நாடக ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதற்கிடையே இந்த ஊழல் புகார் தொடர்பாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசுக்குக் கீழ் முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை இந்த முடா நிறுவனம் சட்டவிரோதமாக வழங்கியது என்பதே குற்றச்சாட்டு.

முடா வழக்கு: இது குறித்து சித்தராமையா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக, ஜேடிஎஸ் தலைவர்கள் அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் அனுமதி கோரினர். கர்நாடக ஆளுநர் அதற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.. இருப்பினும், ஆளுநரின் அனுமதியை எதிர்த்து சித்தராமையா கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தன் மீதான வழக்கு விசாரணைக்கு அவர் தடை கோரியிருந்தார். இருப்பினும், இந்த சித்தராமையாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக ஐகோர்ட், விசாரணைக்குத் தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. இதற்கிடையே முடா விவகாரம் குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
சித்தராமையா: முடா விவகாரத்தை பாஜகவின் அரசியல் பழிவாங்கல் எனக் குறிப்பிட்ட சித்தராமையா, ஆளுநர் மாளிகையைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள அரசுகளுக்கு நெருக்கடி தர முயல்வதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "முடா வழக்கு போலியான ஒன்று. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எங்கள் அரசு கொண்டு வரும் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே பாஜக மற்றும் ஜேடிஎஸ் இணைந்து இந்த சதியைச் செய்கிறது. பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்போரின் முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தயங்க மாட்டேன்: நான் இது குறித்து விசாரிக்கவும் தயங்க மாட்டேன். சட்டப்படி இதுபோன்ற விசாரணை அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
ஏழைகளுக்கு ஆதரவாக நிற்பதாலும், சமூக நீதிக்காகப் போராடுவதாலும் பாஜக மற்றும் ஜேடிஎஸ் இணைந்து எனக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்துள்ள பாஜக அங்குள்ள காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறது.
ஆபரேஷன் கமல்: கர்நாடக மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தரவில்லை. கடந்த முறை கூட ஆபரேஷன் கமலை நடத்தி ஏமாற்றியே பாஜக ஆட்சிக்கு வந்தது. போன வருடம் நடந்த தேர்தலில் மக்கள் ஆபரேஷன் கமலாவுக்கு வாய்ப்பை தராமல் 136 இடங்களில் எங்களை வெல்ல வைத்து ஆட்சியைப் பிடிக்க உதவினர். இதனால் விரக்தியடைந்த பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் ஆளுநர் மாளிகையைப் பயன்படுத்திக்கொண்டு, எங்கள் அரசுக்கு இடையூறு விளைவிக்க என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர்.
எனது 40 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் இதுபோன்ற பழிவாங்கும் அரசியலைப் பல முறை பார்த்துள்ளேன். கர்நாடக மக்களின் ஆசீர்வாதத்தாலும், வாழ்த்துகளாலும் அதை வென்று வருகிறேன். மக்களின் ஆசீர்வாதத்தைக் கொண்டு இந்த சதியையும் நிச்சயம் வெல்வேன். இன்று என்னை ராஜினாமா செய்யச் சொல்லும் தலைவர்கள் தான், கர்நாடகாவில் ஏழைகள் மக்களுக்கு நான் கொண்டு வந்த திட்டங்களை எதிர்த்தவர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்" என்றார்.












Click it and Unblock the Notifications