சோனியா வழியில் ராகுல்? பழைய "சம்பவத்தை" அழுத்தமாக சொன்ன மல்லிகார்ஜுன் கார்கே.. என்ன நடந்தது தெரியுமா
பெங்களூர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் வரிசையாக வெளியேறி வரும் நிலையில், இது தொடர்பாக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தது முதலே தொடர்ச்சியாக பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வருகிறது. வலுவாக இருந்த மாநிலங்களிலும் கூட ஆட்சியை இழந்துள்ளது.
பஞ்சாப் போல பாஜக வலுவாக இல்லாத இடங்களில் மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு தராமல் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பக்கம் செல்கின்றனர். இதனால் காங்கிரஸ் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தே வருகிறது.
சூத்திரதாரி! நீங்க தலைவராகிடுங்க! அசோக் கெலாட்டிடம் கேட்ட சோனியா காந்தி? காங்கிரஸில் அதிரடி மாற்றம்?
காங்கிரஸ்
தொடர்ச்சியாக இரு மக்களவை தேர்தல்களில் வென்றுள்ள பாஜக, சத்தமின்றி அடுத்த மக்களவை தேர்தலுக்குத் தயாராகத் தொடங்கிவிட்டது. ஆனால், காங்கிரஸின் நிலைமையோ மிகவும் மோசமாகவே உள்ளது. ஒரு பக்கம் மத்தியப் பிரதேசம், பஞ்சாப் எனப் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்ததுள்ளது. அதேபோல மறுபுறம் கபில் சிபில், சிந்தியா, ஹர்திக் படேல் என வரிசையாக முக்கிய தலைவர்கள் விலகி வருகின்றனர்.
குலாம் நபி ஆசாத்
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் நேற்று கட்சியில் இருந்து விலகினார். சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் தலைமைக்கும் அவருக்கும் சில காலமாக மோதல் இருந்தாலும் கூட, அவர் கட்சியில் இருந்து விலகுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
ராஜினாமா
தனது ராஜினாமா தொடர்பாக அவர் சோனியா காந்திக்கு நீண்ட கடிதத்தையும் எழுதி உள்ளார். ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையால் தான் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததாகவும் ராகுல் துணைத் தலைவர் பதவிக்கு வந்தது முதலே மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு ஜால்ரா அடிப்பவர்கள் கைகளில் கட்சி சென்றுவிட்டதாகவும் சாடியுள்ளார். மேலும், காங்கிரஸில் ஆலோனை முறையே ஒழிக்கப்பட்டதாகவும் அவர் சாடியிருந்தார்.
சோனியா காந்தி
இவர் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பெரும்பாலான தலைவர்களும் ராகுல் காந்தியையே கடுமையாக விமர்சித்து இருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே தலைவர் இல்லாத சூழலில் இந்த விமர்சனம் அக்கட்சிக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த 2019இல் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி காங். பதவி விலகினார். அதன் பின்னர், தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் உடன்பாடு ஏற்படாததால் சோனியா காந்தி இடைக்கால தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.
அடுத்த தலைவர்
அதன் பின்னர் நீண்ட காலமாகவே தலைவர் பொறுப்புக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் வேறுவழியின்றி சோனியா காந்தியே இடைக்கால தலைவர் பதவியில் தொடர்ந்து வருகிறார். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குரலும் அதிகரித்து வருகிறது. இப்போது காங்கிரஸ் நிர்வாகிகளாக உள்ள பலரும் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
விமர்சனம்
அதாவது ஒரு புறம் மூத்த தலைவர்கள் பலரும் ராகுலை விமர்சித்தே கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், மறுபுறம் அவரது ஆதரவாளர்கள் நிச்சயம் அவர் தான் தலைவராகத் தொடர வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இருப்பினும், இதுவரை தான் தலைவர் பதவியை ஏற்கப்போவது இல்லை என்றே ராகுல் காந்தி கூறி வருகிறார். சோனியா காந்தியும் உடல்நிலை காரணமாகத் தலைவர் பொறுப்பேற்க மறுத்துவிட்ட நிலையில், தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் தொடரவே செய்கிறது.
மீண்டும் ராகுல் தான்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேறு யாரும் இல்லாததால், ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும் என்று மூத்த தலைவர் எம்.மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். அவர் மறுத்தாலும் கட்டாயப்படுத்தி அவரை தலைவர் பதவிக்குக் கொண்டு வருவோம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் நன்கு அறியப்பட்டவராகவும் செல்வாக்கு உள்ளவராகவும் உள்ளதால் ராகுலே ஒரே வாய்ப்பு என கார்கே குறிப்பிட்டார்.
பழைய சம்பவம்
மேலும், கடந்த காலத்தில் நடந்த மற்றொரு முக்கிய விஷயத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். சோனியா காந்தியை மூத்த தலைவர்கள் அனைவரும் சேர்ந்து தான் கட்சியில் இணைந்து பணியாற்ற வற்புறுத்தியதை நினைவு கூர்ந்த அவர், அதேபோல ராகுல் காந்தியும் தலைமை ஏற்றுக் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டும் எனத் தெரிவித்தார். வரும் காலத்தில் பல முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் என்பது அவசியம் தேவை. அந்த பொறுப்பிற்கு யார் வருவார் என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.