மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு
டெல்லி: மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை 9 லிருந்து 12 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது மானியவிலையில் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்த ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் ராகுல் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது மானிய விலையிலான சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சிலிண்டர் எண்ணிக்கை வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.80,000 கோடி நிதிச்சுமை அதிகரிக்கும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தகவல் தெரிவித்துள்ளார். ஆதார் அட்டை மூலம் மானியம் வழங்கும் திட்டம் தள்ளி வைக்கப்படுவதாகவும் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பெண்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வாக்கு வங்கியை குறிவைத்தே சிலிண்டர்களின் எண்ணிக்கையை காங்கிரஸ் கட்சி உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.