டிரைவிங் லைசென்ஸ் உடன் ஆதார் இணைக்கப்பட்டால் குற்றவாளி தப்ப முடியாது - மத்திய அமைச்சர்
ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை: ஆதார் எண்ணுடன் டிரைவிங் லைசென்ஸ் இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இதன் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் செல்வோர்களை எளிதில் பிடிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை பலரும் வைத்துள்ளனர். விதிகளை மீறும்போது ஓர் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போலி பெயர்களிலும் ஓட்டுநர் உரிமங்கள் வாங்கிக் கொள்கிறார்கள், இவ்வாறு ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதைத் தடை செய்யும் வகையில், ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அது தவிர, பான் கார்டு, சிம் கார்டு, வங்கிக் கணக்கோடும் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி வருகிறது மத்திய அரசு. இதே போல டிரைவிங் லைசென்ஸ், தேர்தல் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
டிரைவிங் லைசென்ஸ் உடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டத் துறை அமைச்சர் கூறியிருந்தார். இதுகுறித்து சமீபத்தில் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், டிரைவிங் லைசென்ஸ் உடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.
ஆதார் எண் இணைக்கப்பட்டால் குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டு, வெளியூருக்கு தப்பிச் செல்பவர்களை எளிதில் பிடிக்க முடியும் என்றும் கூறினார். ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், கைரேகையை எப்படி மாற்ற முடியும்?” என்றும் அவர் கேட்டார்.
வங்கிக் கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தைக் கால வரையறையின்றி நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.