நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில மணிநேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.09 உயர்வு
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.09 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
மாதாமாதம் டீசல் விலை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி டீசல் விலை கடந்த 2 மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. 9 கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து டீசல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ. 1.09 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வில் மாநில விற்பனை வரி அல்லது வாட் வரி சேர்க்கப்படவில்லை. அதனால் அந்த வரியெல்லாம் சேர்த்த பிறகு நகரம்தோறும் டீசல் விலை மாறுபடும்.
டெல்லியில் வரியை சேர்த்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.22 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போதைய டீசல் விலை ரூ.56.71 ஆக உள்ளது.
சென்னையில் ரூ.59.18க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசலின் தற்போதைய விலை ரூ. 60.50 ஆகும். மும்பையில் 63. 86க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ. 65.21க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் ரூ.60.11க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.61.38க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications