மே மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.94,016 கோடி - காரணம் இ வே பில்
மே மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 94,016 கோடி ரூபாயாக உள்ளது. இந்த ஆண்டின் சராசரி மாத ஜிஎஸ்டி வசூலை விட அதிகமாகும்
டெல்லி: மே மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.94,016 கோடியாக இருக்கிறது. ஆனால் கடந்த ஏப்ரலில் ரூ.1.03 லட்சம் கோடி அளவுக்கு வசூலானது. கடந்த நிதி ஆண்டில் சராசரியாக மாதத்துக்கு ரூ.90,000 கோடியாக வந்திருந்த நிலையில் மே மாத வசூல் ரூ.94,016 கோடியாக இருக்கிறது.
பல முனை வரிகளான வாட் வரி, கலால் வரி, சுங்க வரி, நுழைவு வரி (Entry Tax) பொழுது போக்கு வரி என பலதரப்பட்ட வரி முறைகளாக இருந்த வரி விவிதிப்பு முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக ஒரே தேசம் ஒரே வரி (One Nation One Tax) என்ற முழக்கத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாதமும் வசூலான தொகை எவ்வளவு என்பதை வரித்துறையினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டியில் ரூ.94,016 கோடி வசூலாகியுள்ளதாக நிதித்துறைச் செயலாளர் ஹஷ்முக் ஆதியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வசூலான தொகையில் ரூ.15,866 கோடி மத்திய ஜிஎஸ்டியாகவும், ரூ.21,691 கோடி மாநில ஜிஎஸ்டியாகவும், ரூ.49,120 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாகவும் வசூலாகி இருக்கிறது. செஸ் மூலமாக ரூ.7,339 கோடி வசூலாகி இருக்கிறது.
மொத்த தொகை மட்டுமல்லாமல், வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் மாத இறுதியில் 60.47 தாக்கல்கள் மட்டுமே செய்யப்பட்டன. ஆனால் மே மாதம் 62.46 லட்சம் தாக்கல்கள் செய்யப்பட்டிருப்பதாக ஆதியா குறிப்பிட்டிருக்கிறார்.
இ-வே பில் அறிமுகப்படுத்தப்பட்டதால் அதன் தாக்கம் ஜிஎஸ்டி வசூலில் தெரிந்துள்ளதாகவும் வருங்காலத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் இன்னும் அதிகமாகும் என்றும் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.
நடப்பு 2018-19ம் நிதியாண்டில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்தே மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்திற்கு உதவும் இ-வே பில் என்னும் இணையவழி ரசீது பயன்பாடு அமல்படுத்தப்பட்டதாலும் ஏப்ரல் மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் 1,03,458 கோடி ரூபாயை தொட்டு சாதனை படைத்தது.
2017-2018 நிதியாண்டில் ஜிஎஸ்டி மூலம் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சமாளிக்கும் வகையில் மொத்தமாக ரூ.47,844 கோடி மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.