2018-19 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3% ஆக அதிகரிக்கும் - உலக வங்கி கணிப்பு
2018ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதத்தை தொடும் என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வாஷிங்டன்:சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மற்றும் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கத்தால் 2017ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தாலும் 2018 -19ஆம் நிதிஆண்டில் வேகமெடுத்து 7.3 சதவிகித்தை தொடும் என்று உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டின் இறுதியில் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய பொருளாதாரம் சற்று தள்ளாடத் தொடங்கியது. இருந்தாலும் பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் சற்று ஏற்றம் காணத் தொடங்கியது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட புதிதில் உற்பத்தி துறையில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி திரும்பவும் லேசாக ஆட்டம் காணத் தொடங்கியது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் பெரும்பாலான பொருட்களுக்கான வரியானது அதிக பட்சமாக இருந்ததே இந்த தள்ளாட்டத்திற்கு காரணமாகும். ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தொழில்துறையினர் மற்றும் வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று பொருட்களின் அதிக பட்ச ஜிஎஸ்டி வரியை குறைக்க தொடங்கினர்.
ஜிஎஸ்டி வரியை குறைக்கத் தொடங்கியதால் தொழில் துறையில் உற்பத்தியும் அதிகரிக்கத் தொடங்கியது. இவ்வாறு ஒவ்வொறு மாதமும் குறைக்க தொடங்கி இறுதியில் நவம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அதிகபட்சமாக சுமார் 178 பொருட்களுக்கான அதிக பட்ச வரியை 5 முதல் 18 சதவிகிதம் வரையிலும் குறைத்து ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவிட்டது.
இதனால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியும் சற்று அதிகரிக்கத் தொடங்கியது. கூடவே தென்மேற்கு பருவ மழையும் கை கொடுத்ததால் விவசாய உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் நுகர்பொருட்களின் பணவீக்க விகிதமும் குறையத் தொடங்கியது. இவை எல்லாம் சேர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி செலுத்தும் உந்து சக்தியாக இருந்தன.
உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால், தொழில் துறையினர் செலுத்தும் முன்கூட்டியே நேரடி வரிகள் (Advance Tax) அதிகரித்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017-18ம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தொழில் துறையினர் முன்கூட்டியே செலுத்திய நேரடி வரிகள் சுமார் 18 சதவிகிதம் ஆகும். இது இந்த நிதி ஆண்டில் வசூலிக்க திட்டமிட்ட இலக்கில் மூன்றில் இரண்டு மடங்காகும். இதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி குறைந்தது எனலாம்.
தற்போது ஜிஎஸ்டியில் இருந்த குழப்பங்கள் பெரும்பாலும் நீங்கிவிட்டதால் ஜிஎஸ்டி வரி வசூலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்களும், வெளிநாட்டு பொருளாதார ஆய்வு நிறுவனங்களும் உலக வங்கியும் அடித்துக் கூறுகின்றனர்.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார தேக்கம் ஏற்பட்டு இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என ஆறு மாதங்களுக்கு முன், உலக வங்கி மதிப்பிட்டு இருந்தது.
2018 -19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக அதிகரிக்கும். 2019 -20 நிதியாண்டில் இது 7.5 சதவீதத்தை தொட வாய்ப்புள்ளது. உலகளாவிய முதலீடுகளும் அதிகரிக்கும்.
உலக வங்கியின் அபிவிருத்தி வாய்ப்பு குழுவின் இயக்குநர் ஐஹான் கோஷ் கூறுகையில், கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவை விட சீனாவின் பொருளாதார வளர்ச்சி சற்று அதிகமாக இருந்தது. உலக வங்கி மதிப்பீட்டின் படி 2017ம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்கியானது 6.8 சதவிகிமாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.7 சதவிகிமதாகவும் இருந்தது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை தொழில் துறையினர் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிரமங்களால் இந்த சரிவு நிலை ஏற்பட்டது. ஆனால், 2018ம் ஆண்டு இந்தியாவிற்கான ஆண்டாகவே இருக்கும். ஏனெனில், சீனாவை விட இந்தியாவில் உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வசதி வாய்ப்புகள் மகத்தான அளவில் உள்ளன. இதனால், இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 7.3 சதவிகிதத்தை எட்டும். ஆனால் அதே சமயம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.4 சதவிகிமாகவே இருக்க வாய்ப்புள்ளது என்றார்.