ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூ. 70000 கோடி இழப்பு.. சிமெண்ட், ஏசி வரி குறையும் - நிதியமைச்சர்
ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரிக் குறைப்பால் அரசுக்கு ரூ.70,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் இப்போது வரை 384 பொருட்களின் வரியை ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.70,000 கோடி வரி வருவாய் குறையுமென்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
உற்பத்தி வரி, விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது.
இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இது தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. பலமுறை வரிகள் குறைக்கப்பட்டுள்ளன மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 384 பொருட்களின் வரியை ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது.
வரிகள் குறைய வாய்ப்பு
ஜூலை 21ஆம் தேதி நடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரிக் குறைப்பு நேற்று அமலுக்கு வந்ததையொட்டி, இதைக் கொண்டாடும் விதமாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிவிட்டுள்ளார். சிமெண்ட், ஏசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதம் வரும் நாட்களில் குறைக்கப்படலாம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
88 பொருட்கள் வரி குறைப்பு
ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சானிட்டரி நாப்கின், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இந்த வரிக் குறைப்புக்கு அருண் ஜேட்லி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் இப்போது வரை 384 பொருட்களின் வரியை ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.70,000 கோடி வரி வருவாய் குறையும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
28 சதவிகித வரி
சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வு எடுத்து வரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இதுகுறித்து ஜூலை 27ஆம் தேதி அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். “தற்போது சிமெண்ட், ஏசி, எல்.இ.டி டிவி, போன்ற சில ஆடம்பரப் பொருட்கள் மட்டும்தான் அதிகபட்ச வரிவிதிப்பான 28 சதவிகித வரி வளையத்திற்குள் உள்ளன.
ரூ 70000 கோடி வருவாய் குறையும்
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பு பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்கள் 31 சதவிகித வரி வளையத்தில் இருந்தன. அது காங்கிரஸ் கட்சி காலங்காலமாகப் பின்பற்றி வந்த வரி முறை. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த 36 மாதங்களில் இந்தச் சாதனையை படைத்துள்ளோம். ஜிஎஸ்டி கவுன்சில் கிட்டத்தட்ட 28 சதவிகித வரியை நீக்கிவிட்டது என்றே சொல்லலாம். இந்த வரிக் குறைப்பால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.70,000 கோடி வரையில் வரி வருவாய் குறையும்.
கொண்டாடும் நேரம்
ஆனால் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டிக்கு முன்பிருந்த வரி வருவாயை விட இப்போது 14 சதவிகிதம் அதிகமாகக் கிடைக்கும். சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வரி சீர்திருத்தம் இதுதான். எனவே இதைக் கொண்டாடும் நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார். வரி வருவாய் அதிகமாக இருப்பதால், தற்போது 28 சதவிகித வரி வளையத்தில் உள்ள ஏசி, பெரிய தொலைக் காட்சிப் பெட்டி மற்றும் சிமெண்ட் ஆகியவற்றின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
384 பொருட்களுக்களின் வரி குறைப்பு
கடந்த13 மாதங்களில், 28 சதவிகித விகிதாச்சார பிரிவிலிருந்து ஏராளமான பொருட்களை ஜிஎஸ்டி கவுன்சில் நீக்கிவிட்டது. காங்கிரஸ் மரபு வரியின் இரங்கல் செய்தியை எழுதுவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. கடந்த ஓராண்டு காலமாக, 384 பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளுக்குக் கூட வரி விகிதம் உயர்த்தப்படவில்லை என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.