வரலாறு காணாத ஆட்குறைப்பில் குதிக்கும் மைக்ரோசாப்ட்.. 'ஷாக்'கில் ஊழியர்கள்!
நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆட்குறைப்பை விரைவில் நடத்தப் போகிறது. இதனால் தகவல் தொழில்நுட்பத்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியரான சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள முதல் ஆட்குறைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தில் மிகப் பெரிய மாற்றம் வரவுள்ளதாக கடந்த வாரமே அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

மிகப் பெரிய ஆட்குறைப்பு
வியாழக்கிழமை இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை மைக்ரோசாப்ட் வெளியிடும் என்று தெரிகிறது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத ஆட்குறைப்பு
மேலும் இது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையாக இருக்கும் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

2009ல் 5800 பேர்
கடந்த 2009ம் ஆண்டு கடைசியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது 5800 பேர் வேலையை இழந்தனர்.

பிசினஸ் பிரிவில்தான்
அனேகமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிசினஸ் பிரிவில்தான் அதிக அளவிலான ஆட்குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கியபோது நிறுவனத்தில் கூடுதலாக 25,000 பேர் இணைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

நோக்கியாக்காரர்களுக்கு ஆபத்து
நோக்கியா நிறுவனத்தைச் சேர்ந்த பலருக்கு வேலை போகும் என்று தெரிகிறது. அதேசமயம் நோக்கியா மீது மட்டும் கை வைக்கப்படாது என்றும் தெரிகிறது.

வாஷிங்டன் அலுவலகம் தயாராகிறது
ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வேலையை இழக்கும் ஊழியர்களைச் சந்திக்கவும், அவர்களுக்கு ரிலீவிங் உத்தரவுகளைக் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவும், வாஷிங்டனில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன வளாகம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுடன் நாதெள்ளா பேசுவார்
மேலும் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் நாதெள்ளாவைச் சந்திக்கவும் வாய்ப்பு அளிக்கப்படும். டவன்ஹால் சந்திப்பின்போது இந்த வாய்ப்பு தரப்படும்.

அரியதிலும் அரிது
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆட்குறைப்பு என்பது மிகவும் அரியதாகும். கடந்த 2009ம் ஆண்டு பொருளாதார சீர்குலைவு காரணமாக ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் ஆட்குறைப்பு நடைபெறவுள்ளது.

1.25 லட்சம் பேர்
தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். மிகப் பெரிய நிறுவனமாக இருந்தபோதிலும், ஊழியர்கள் அதிகம் இருப்பதால், மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடுவதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் மிகப் பெரிய ஆட்குறைப்பை தற்போது அது மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications