மாத சம்பளத்தில் வரிப் பிடித்தம் செய்வதை தவிர்க்க பெஸ்ட் வழி- மியூச்சுவர் ஃபண்டு தான்
மாதச் சம்பளதாரர்கள் தங்களின் வரி சேமிப்பிற்காக ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்தால், இவற்றை முதலீடு செய்த நாளிலிருந்து மூன்று வருடங்கள் கழித்து தங்களின் பணத்தை எடுத்துக் கொள்ளலா
சென்னை: மாத சம்பளம் வாங்குபவர்கள் தங்களின் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்வதை தவிர்க்க மியூச்சுவர் ஃபண்டில் முதலீடு செய்தால் பணம் மூன்று ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாக கிடைக்க வாய்ப்புள்ளது என்று ஆலோசனை கூறியுள்ளார் நமது ஒன் இந்தியாவின் நிதி ஆலோசகர்.
தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் இலாபத்திற்கு ஏற்றவாறு வருமான வரியை ஒவ்வொது ஆண்டும் வருமான வரி படிவம் தாக்கல் செய்யும்போதோ அல்லது இலாபத்தை உத்தேசமாக கணித்து முன்னரே நான்கு கட்டங்களாக முன்கூட்டியே வரியை செலுத்துவது (Advance Tax) வாடிக்கையாகும்.
அதே சமயத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்களில், அதிலும் மாதச் சம்பளம் 30000 ரூபாய்க்கு அதிகமாக வாங்குபவர்களாக இருந்தால் அவர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து கண்டிப்பாக வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு வரிப் பிடித்தம் செய்வதை தவிர்க்க மாதச் சம்பளதாரர்கள் பெரும்பாலும் நாடுவது தபால் நிலையங்களிலோ அல்லது வங்கிகளிலோ செய்யப்படும் பிபிஎஃப் எனப்படும் பொதுப் பணியாளர் நிதியையோ அல்லது தேசிய சேமிப்பு பத்திரங்களைத்தான்.
பிபிஎஃப் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களில்முதலீடு செய்வது என்பது பாதுகாப்பானது என்றாலும் இவற்றிற்கு கிடைக்கும் வட்டி விகிதம் என்பது மிகவும் குறைவாகும். ஆண்டிற்கு 7.5 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரையில்தான் இவற்றில் செய்யப்படும் முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டியாகும். மேலும் இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்யும் முதலீடுகளை பதினைந்து வருடங்களுக்கு எடுக்க முடியாது.
மாதச் சம்பளதாரர்களுக்கு வரிப் பிடித்தம் என்ற தலைவலியில் இருந்து தப்பிக்க பிபிஎஃப் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களை விட மூன்று மடங்கு இலாபத்தை தரும் ஈஎல்எஸ்எஸ் (ELSS) மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களைப் பற்றிய சிந்தனை வருவதில்லை. மாதச் சம்பளதாரர்கள் தங்களின் வரி சேமிப்பிற்காக ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்தால், இவற்றை முதலீடு செய்த நாளிலிருந்து மூன்று வருடங்கள் கழித்து தங்களின் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மாதச் சம்பளதாரர்கள் ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவர் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு தங்களின் முதலீட்டு ஆலோசகரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு பற்றிய போதிய தெளிவு இருந்தாலும், பின்வரும் காரணிகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்
முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை
•தாங்கள் செய்யப்போகும் திட்டங்கள் எந்த வருடத்தில் தொடங்கப்பட்டது என்பதை ஆராயவேண்டும்.
•தொடங்கப்பட்ட தேதியில் இருந்து சராசரியாக எவ்வளவு வருமானத்தை தந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
•தொடங்கப்பட்ட தேதியில் இருந்து எவ்வளவு சொத்துக்களை நிர்வகித்து வருகின்றது என்பதை ஆராயவேண்டும்.
•இந்த திட்டத்தை நிர்வகிக்கும் மேலாளரின் அனுபவம் மற்றும் இந்த திட்டத்தை எத்தனை வருடங்களாக நிர்வகித்து வருகிறார் என்பதையும் ஆராயவேண்டும்.
•மேலும், இந்த மியூச்சுவர் ஃபண்டு திட்டம் தொடர்ச்சியாக பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணை விட அதிக வருமானத்தை தந்து வருகின்றதா என்பதையும் ஆராயவேண்டும்.
•தாங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள மியூச்சுவல் ஃபண்டு திட்டமானது அந்த துறையில் எத்தனை மதிப்பீட்டை (Star Rating) பெற்றுள்ளது என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்.
•இவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்ட பின்பு முதலீடு செய்தால், முதலீடு செய்த நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் கழித்து நிச்சயம் எதிர்பார்த்த வருமானத்தை கொடுக்கும் என்பது நிச்சயம் ஆகும்.