பார்வையற்றவர்களுக்கு வசதியாக ப்ரெய்லி வசதியுடன் ஏடிஎம்... ஜூலையில் அறிமுகம்
டெல்லி: பார்வைத் திறனற்றவர்களும் எளிதாக கையாளும் வகையில் ப்ரெய்லி வசதியுடன் புதிய ஏடிஎம் மையங்கள் அறிமுகமாகவுள்ளன.
தற்போது, பார்வை திறனற்றவர்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு மற்றவர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. இது பல சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தாகும் சூழ்நிலையும் உண்டாகிறது.
எனவே, புதிதாக அமைய உள்ள ஏடிஎம் மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென பல புதிய அம்சங்களைப் புகுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி...
கடந்த 2009ம் ஆண்டே வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம்களில் மூன்றில் ஒருபங்கை மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்துமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.
தகவல்கள் அறிவிப்பு...
இந்நிலையில் ஜூலை முதல் புதியதாக அமைக்கப்படும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களில் தகவல்களை அறிவிக்கும் வசதியை அறிமுகப் படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
பிரெய்லி வசதி...
அதேபோல், பார்வையற்றோர் பயன்படுத்தக்கூடிய பிரெய்லி வசதியையும் ஏடிஎம்களில் ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
சுற்றறிக்கை...
மேலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஏடிஎம்.,களிலும் பார்வையற்றோருக்கான ப்ரெய்லி முறை பலகை மற்றும் தகவல்களை அறிவிக்கும் வசதியை ஏற்படுத்துவதற்கான வழிகளை ஆராய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.